போதைப்பொருட்கள் கடத்தல்; தடுக்க ரயில்வே போலீசார் நடவடிக்கை

0
2

வடமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில், அதைத்தடுக்க ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார் இணைந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை தொழில் நகரம் என்பதால், வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ரயில்களில் வருவதும் போவதுமாக உள்ளனர். தொழிலுக்காக வரும் ஒரு சிலர், அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில், ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கோவைக்கு கடத்துகின்றனர்.

கோவைக்கு எடுத்து வரப்படும் இப்போதை வஸ்துக்கள், இங்கிருந்து கேரளா, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன. பயணிகளுடன் பயணியாக வரும் இவர்கள் மீது, யாருக்கும் சந்தேகம் ஏற்படுவதில்லை.

உடமைகளில் மறைத்து, கிலோ கணக்கில் போதைப்பொருட்களை எளிதாக கடத்தி விடுகின்றனர். பெரும்பாலானோர் பிடிபட்டாலும், ஒரு சிலர் தப்பி விடுகின்றனர். போலீசார் பிடித்து விடுவர் என அறிந்தால், கஞ்சா மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்புவோரும் உள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 100 கிலோ வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கடத்தல் தொடர்ந்து கொண்டே உள்ளது.

இதையடுத்து, கடத்தலை தடுக்க தற்போது போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது. இரு ஸ்கேனர் கருவிகள் நிறுவப்பட உள்ளன.

ரோந்து பணிகளை அதிகரிக்கவும், வெடிகுண்டு செயலிழப்பு, மோப்பநாய் சோதனையை தினமும் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே போலீஸ் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘கடத்தலில் பிடிபட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஒரு சில ரயில்வே ஸ்டேஷன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். கோவை ரயில்வே ஸ்டேஷனில், 120 கேமராக்கள் கூடுதலாக பொருத்தப்பட உள்ளன. ரயில்வே ஸ்டேஷன் முன், பின் பகுதிகளில் உடமைகளை சோதனை செய்யும், ஸ்கேனர் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.

கூடுதலாக இரு கருவிகள் பொருத்தப்பட உள்ளன. தண்டவாளங்களில் கற்கள், கான்கிரீட் சிலாப்கள் வைப்பதை தடுக்கவும், இரவு ரோந்து பணிகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் ரயிலில் கடத்தப்படுவதை தடுக்க, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.