‘ஜாதிவாரி கணக்கெடுப்பை வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டும்’ என, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, கூட்டமைப்பு தலைவர் ரத்தினசபாபதி, கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்தது. இந்நிலையில், திடீரென ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என, நம்புகிறோம். பல்வேறு கட்சிகள் இது, தங்களுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறிக் கொண்டாலும், எங்கள் அமைப்பு, 2020 முதல் பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தியதை யாரும் மறுக்க முடியாது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது, குறிப்பிட்ட ஜாதியில் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல. ஒவ்வொரு ஜாதியிலும் எவ்வளவு பேர் உள்ளனர். எத்தனை பேர் உயர்கல்வி பயின்றுள்ளனர், அரசுப் பணி பெற்றுள்ளனர், அவர்களின் சமூக பொருளாதார நிலை என பல்வேறு அளவுகோல்களை உள்ளடக்கியதாகும்.
எந்தவித தரவும் இல்லாமல், மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. மாநில அரசோ, ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த உரிய அதிகாரம் இருந்தும் தட்டிக்கழித்து வந்தது. புள்ளிவிவரச் சட்டம் 2008 இதற்கு வகை செய்தாலும், மாநில அரசு செய்யவில்லை.
பீஹார், தெலங்கானா, கர்நாடகா மாநிலங்கள் இதனைச் செய்து விட்டன. சமூக நீதி பேசும் தி.மு.க., இதனைச் செய்யவில்லை.
மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் 27 சதவீத இட ஒதுக்கீடு ஓ.பி.சி.,யினருக்கு இருந்தாலும், அதில் 9 சதவீதம் அமலுக்கு வரவில்லை.
மத்திய அரசும் அறிவிப்போடு நில்லாமல், முறையான தரவுகளோடு கணக்கெடுத்து, வெளிப்படைத்தன்மையோடு வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில், 70 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி, அரசு வேலை வாய்ப்பு போன்றவை மறுக்கப்பட்ட ஓ.பி.சி., சமூகத்தினருக்கு உரிய சமூக பொருளாதார முன்னுரிமை மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார். கூட்டமைப்பு துணைத் தலைவர் வெள்ளியங்கிரி, தென்மண்டலத் தலைவர் வேலு உடனிருந்தனர்.