தமிழகத்தை காப்பாற்ற இந்துக்கள் ஒன்றிணைய வேண்டும்: எச்.ராஜா

0
7

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின், 60வது பிறந்தநாளை முன்னிட்டு, மணிவிழா பொதுக்கூட்டம், கோவை, ராஜவீதி தேர்நிலை திடலில் நேற்று மாலை நடந்தது.

இதில் பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாவது: தி.மு.க.,வினர் தேச துரோகிகள். இந்திய ஒற்றுமையை கெடுக்க வேண்டும் என சுதந்திரத்தின் போதிருந்தே முயற்சி செய்து வருபவர்கள். 2010ம் ஆண்டு, நீட் மசோதா நிறைவேற தி.மு.க., வினர் முன்மொழிந்தனர்.

சோனியா மற்றும் கருணாநிதி ஆட்சியில் இருந்த போது, நீட் தேர்வு முதல் முறையாக நடந்தது. இப்போது, அதை வைத்து அரசியல் செய்து கொண்டுள்ளனர். இவற்றையெல்லாம் மீறி, தற்போது, இந்துக்களின் சொத்துக்களை அபகரிக்கின்றனர்.

இந்து கோவில்களில் நிலம், பணத்தை அரசு கொள்ளையடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. கடந்த ஆண்டுகளில் போதைப்பொருட்கள் புழக்கத்தில், பஞ்சாப்தான் முதல் மாநிலமாக இருந்தது. தற்போதைய தி.மு.க., ஆட்சியால், தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. பள்ளி குழந்தைகள் வீட்டுக்கு வந்தால், அவர்கள் பைகளில் போதைப்பொருட்கள் உள்ளதா என பெற்றோர் சோதித்து பார்க்கும் அளவுக்கு, தமிழகத்தை சீரழித்து வைத்துள்ளனர்.

ஒவ்வொரு விஷயத்திலும், தமிழக முதல்வர் பொய் மட்டுமே பேசி வருகிறார். பொய் புரட்டு திராவிட உருட்டு. தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், வரும் தேர்தலில் இந்துக்கள் ஒன்றிணைந்து, தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும்.

அதற்கு நாம் ஒவ்வொருவரும், தினமும் குறைந்தது ஐந்து பேரிடம் அல்லது இரண்டு குடும்பங்களை சந்தித்து பேச வேண்டும். இந்துக்களின் உரிமைகளை எடுத்துரைக்க வேண்டும். இவ்வாறு, எச்.ராஜா பேசினார். நிகழ்ச்சியில் இந்துமக்கள் கட்சி, பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

‘2047 வரை மோடிதான் பிரதமராக இருக்கணும்’

நிகழ்ச்சியில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், ”2047 வரை மோடிதான் பிரதமராக இருக்க வேண்டும். அப்போது தான் நம் நாட்டை காப்பாற்ற முடியும். இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இந்துக்கள், சிறுபான்மையினராக மாறி விட்டனர். இதே நிலை கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அவர்கள் பெரும்பான்மையினராக மாறிவிடுவார்கள். அதன் பின், இந்தியாவை ஒருவராலும் காப்பாற்ற முடியாது,” என்றார்.