கோவை : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் நாளை (மார்ச் 27) நேரில் ஆஜராக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ‘சம்மன்’ அனுப்பியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த, கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அங்கு, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
இதையடுத்து. இந்த வழக்கில் தொடர்புடைய கனகராஜ், சயான், மனோஜ் உட்பட, 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கார் ஓட்டுனர் கனகராஜ், சயானின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர், சாலை விபத்தில் உயிரிழந்தனர். கோடநாடு எஸ்டேட்டில் கணினி பணியாளராக பணியாற்றிய தினேஷ், தற்கொலை செய்து கொண்டார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மற்றும் கனகராஜ், தினேஷ் ஆகியோரின் மரண வழக்குகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தற்போது வரை, 600க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்துள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கில் கைதானவர்கள் மற்றும் எதிர்தரப்பினர் தங்களுக்கு ஒரு சிலர் மீது சந்தேகம் இருப்பதாக, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதைதொடர்ந்து, 18 பேரிடம் விசாரிக்க, உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அமர்வு உத்தரவிட்டது.
அதன்பேரில், கோடநாடு எஸ்டேட் பங்களாவில் முன்னாள் பங்குதாரராக, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் இருந்ததால், அவரை வரும், 27ம் தேதி சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.