உலகளாவிய உணவுத் தேவை 70 சதவீதம் அதிகரிக்கும்: வேளாண் பல்கலை பட்டமளிப்பு விழாவில் தகவல்

0
7

கோவை : கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நடந்த 45வது பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி 4,434 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற, தோல் ஏற்றுமதிக்கழக நிர்வாக இயக்குநர் செல்வம் பேசியதாவது: இந்தியாவின் வேளாண் கலாசாரத்தை மாற்றியமைப்பதில், 124 ஆண்டுகளாக தமிழ்நாடு வேளாண் பல்கலை, முக்கியப் பங்காற்றி வருகிறது. வேளாண் துறையில் புரட்சிகரமான மாற்றத்துக்கு, இந்தியா ஆயத்தமாக உள்ளது.

உணவுப்பாதுகாப்பு என்பதைத் தாண்டி, பிரதமரின் ‘தன தான்ய கிரிஷி யோஜனா’ உள்ளிட்ட திட்டங்களால், விவசாயிகளின் வளம், இரட்டிப்பு வருவாய், நீடித்த வளர்ச்சி, தொழில்நுட்ப புத்தாக்கம் ஆகியவற்றில், கவனம் செலுத்தி வருகிறது.

நீரை திறம்பட நிர்வகித்தல், மண் வளம், இயற்கை வேளாண்மை, டிஜிட்டல் மாற்றங்கள் என, இந்தியா ஏராளமான புத்தாக்கங்களைப் புகுத்தி வருகிறது. எனினும், 2050ல் மக்கள்தொகை 1,000 கோடியாக உயர்ந்து, உலகளாவிய உணவுத் தேவை, 70 சதவீதம் அதிகரிக்கும். 10ல் ஒரு பங்கு மக்கள் பட்டினியாக இருப்பர். இவ்வாறு, அவர் பேசினார்.

கவர்னர் ரவி, 4,434 மாணவர்களுக்கு இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டங்களை வழங்கினார். பல்கலை பதிவாளர் தமிழ்வேந்தன், வேளாண்மை டீன் வெங்கடேச பழனிசாமி, முதுநிலை மேற்படிப்பு பயிலக டீன் சுரேஷ்குமார், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பாலசுப்ரமணி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

அமைச்சர் புறக்கணிப்பு

வேளாண் பல்கலையின் இணைவேந்தராக, தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளார். தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் மோதல் போக்கு தொடர்வதால், பட்டமளிப்பு விழாவை அமைச்சர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இந்த ஆண்டும், அமைச்சர் பன்னீர் செல்வம் பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துவிட்டார்.

‘ஆய்வு படிப்புகள் அறிமுகம்’

விழாவில், பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், “பல்கலையில் உணவுத் தொழில்நுட்பத்தில் முதுகலை மற்றும், முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 2024—25ல், 1257 இளநிலை பட்டதாரிகள் வளாகத்தேர்வில் பணி நியமனம் பெற்றனர். 200க்கும் மேற்பட்டவர்கள், யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் தேர்வாகியுள்ளனர். 2024ல், 1,304 ஆய்வுக்கட்டுரைகளை, பேராசிரியர்கள் சமர்ப்பித்துள்ளனர்,” என்றார்.