சிறப்பு குழந்தைகளின் தேவைகளை, அவர்களின் முகமறிந்து நிறைவேற்றி, அழுந்த முத்தம் பொழிந்து, ஆசையாய் வளர்க்கும் அம்மாக்கள், அத்தனை பேரும் கடவுள்தான். தங்களை ஆசிர்வதிக்கப்பட்டவர்களாய் உணர்ந்து வாழும், இந்த தாய்மார்கள் சிலரை, சர்வதேச மகளிர் தினத்துக்காக சந்தித்தோம்… நெகிழ்ந்தோம்!
‘கவலைப்பட ஏதுமில்லை’
என் மகளுக்கு 29 வயது ஆகிவிட்டது. எனக்கு 58 வயது ஆகிவிட்டது. இவளது தந்தை, இவள் பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பே, விபத்தில் இறந்து விட்டார். அப்போதிருந்து துவங்கியது என் போராட்டம். எல்லா போராட்டமும் பார்த்தாகி விட்டது. இனி கவலைப்படவோ, பயப்படவோ ஒன்றும் இல்லை. அவள் ஏதாவது ஒரு கைத்தொழில் செய்து, சாப்பாட்டுக்கு வருமானம் வருவது போல் பார்த்துக்கொண்டால் போதும். எனக்கு வேறுஆசை ஏதும் இல்லை.
– சித்ரா, காளப்பட்டி
‘வலி தரும் வார்த்தைகள்’
என் மகனுக்கு, ஆறரை வயது ஆகிறது. சமூகத்தை எதிர்கொள்வதுதான் எங்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. பஸ்சில் இடம் பெறுவது முதல் அவர்களின் பார்வை, கேள்வி ஒவ்வொன்றும் வலியை கொடுக்கும். உடல், மனம், பொருளாதாரம் என
அனைத்தும் தாண்டி தன்னம்பிக்கையுடன் வெளியே வரும் போது, பலரது வார்த்தைகள் எங்களை மீண்டும் முடக்கி போட்டு விடுகிறது.
சிறப்பு குழந்தைகளுக்கென சிட்டி மையப்பகுதியில் ஒருங்கிணைந்த சிகிச்சை, பயிற்சி மையத்தை, அனைத்து மாவட்டங்களிலும் அரசு அமைக்க வேண்டும். ஒரு முறை பிசியோதெரபி செய்ய, 1000 ரூபாய் செலவு செய்ய வேண்டும். இது அனைவராலும் முடியாது. இதுபோன்ற பிள்ளைகளுக்கு இலவசமாக ஓ.டி., பிசியோதெரபி போன்ற சிகிச்சை அளிக்க அரசு, கட்டாயம் உதவ வேண்டும்.
– கீதா, மைல்கல்
‘மகள்தான் என் உலகம்’
எனக்கு 29 வயது ஆகிறது. கணவர் கட்டட வேலைக்கு செல்கிறார். என் மாற்றுத்திறன் மகளுக்கு ஆறரை வயதாகிறது. எங்களுக்கு ஏன் இந்த நிலை என்று நினைக்காத நாளில்லை. எப்படியாவது சரியாகி விடமாட்டாளா என்ற ஆசை எப்போதும் உண்டு. நான்கு வயதில் அவள் மீது, சூடான ரசம் கொட்டி விட்டது ; அதற்கு அவள், எந்த ரியாக்ஷனும் இன்றி இருந்தாள். அப்போது தான் அவளுக்கு இதுபோன்ற குறை இருப்பதை கண்டுபிடித்தோம். இதுபோன்ற குழந்தைகளை எதிர்கொள்வதில் மனம், உடல் மட்டுமல்ல; பொருளதார ரீதியாகவும் சந்திக்கும் சிக்கல் பல. என்ன செய்வது…இனி, அவள் தான் என் உலகம்.
– உமா, சேரன்மாநகர்
மகிழ்ச்சியாகவே பார்க்கிறேன்’
‘அம்மா’ என்ற அந்த மந்திரச்சொல்லை, அவள் அழைப்பதை கேட்கவே, ஐந்து ஆண்டுகள் காத்திருந்தேன். இப்போது, 19 வயது ஆகிவிட்டது; இருந்தும் பசிப்பதை கூட சொல்லத்தெரியாது என் மகளுக்கு. பிறந்தது முதல் இப்போது வரை, அவளை பிரிந்தது இல்லை. சக குழந்தைகளை பார்க்கும் போது, பல ஏக்கங்கள் ஒரு தாயாக எனக்குள்ளும் ஏற்படும். செவிலியர் ஆகி, நிறைய பேருக்கு சேவை செய்ய ஆசைப்பட்டேன்.. ஆனால், பிறந்த மூன்றாவது மாதத்தில் இருந்து, என் மகளுக்கு மட்டுமே சேவை செய்யும் நிலைக்கு ஆளாகி விட்டேன். பல மருத்துவ சிகிச்சைகள், போராட்டங்களை கடந்துவிட்டோம். இப்போது அவளுக்கு, வயது 19.
மாதவிடாய் நாட்களில் நாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் சொல்லிமாளாது.
ஏன் எனக்கு இப்படி ஒரு குழந்தை என்று, சில நேரங்களில் தோன்றும். கோபம், எரிச்சல் எனக்கும் வரும். ஆனால், இதுபோன்ற அழகான குழந்தையை எனக்கு கடவுள் கொடுத்ததை மகிழ்ச்சியாகவே பார்க்கிறேன்.
அவள் யாரிடமும் பேச மாட்டாள்; அவள் தேவைகளையாவது அவள் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்த்து, தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறேன்; பார்க்கலாம்.
—புவனேஸ்வரி,
காரணம்பேட்டை