மாநகராட்சியில் 279.99 கி.மீ., தார் ரோடு; ரூ.123.83 கோடி கேட்டு காத்திருப்பு

0
56

கோவை; கோவையில், 2,061 எண்ணிக்கையிலான சாலைகளில், 279.99 கி.மீ., நீளத்துக்கு புதிதாக தார் ரோடு போடுவதற்கு, ரூ.123.83 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிர்வாக அனுமதி கோரி, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

கோவை மாநகராட்சி, 17வது வார்டு கவுண்டம்பாளையம், சக்தி நகர், 34வது வார்டு ஸ்ரீதேவி நகர், 42வது வார்டு தடாகம் ரோடு கிருத்திகா தியேட்டர் அருகே சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதை, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்க, ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக, ரூ.52.33 கோடிக்கு, 944 எண்ணிக்கையில், 133.90 கி.மீ., நீளத்துக்கு சாலை மேம்பாட்டு பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும், 825 எண்ணிக்கையிலான சாலைகள், 128.15 கி.மீ., நீளத்துக்கு ரூ.50.35 கோடிக்கு நிர்வாக அனுமதி கேட்டு, கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இரண்டாம் கட்டமாக, 2,061 எண்ணிக்கையிலான சாலைகள், 279.99 கி.மீ., நீளத்துக்கு ரூ.123.83 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிர்வாக அனுமதி கோரி, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு, கமிஷனர் கூறினார்.

அதன்பின், வடவள்ளி அருகே பி.என்.புதுார் பஸ் ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி சார்பில் பஸ்களின் வருகை தொடர்பாக பயணிகள் அறியும் வகையில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஸ்கிரீன் சோதனை ஓட்டத்தை கமிஷனர் ஆய்வு செய்தார்.

அப்போது, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை, கல்விக்குழு தலைவர் மாலதி, உதவி கமிஷனர் துரைமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.