தொடர்ந்து உயர்கிறது வெப்பநிலை; காலநிலை மாற்றமே காரணம்

0
28

கோவை; வெப்பநிலை அதிகரித்து வருவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், காலநிலை மாற்றமே, வெப்பநிலை உயர்வுக்கு காரணம் என, காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் கோடை காலம் மார்ச் இறுதியில் துவங்கி ஏப்., மே ஆகிய மாதங்களில், உச்சமடையும். கடந்த சில ஆண்டுகளாக கோடை காலம் முன்கூட்டியே துவங்கி விடுகிறது.

நடப்பாண்டும், பிப்., மாதத்திலேயே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, வெயில் சுட்டு எரித்து வருகிறது. மே மாதத்தில் இருக்கும் உச்சகட்ட வெயில் போல் மார்ச் துவக்கத்திலேயே இருப்பதால் பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவையை பொறுத்தவரை, காலநிலை தரவுகளின்படி, இயல்பை விட நேற்று ஒரே நாளில், ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. வெப்பம் அதிகரிப்பதற்கான காரணம் என்ன, என காலநிலை ஆராய்ச்சியாளர்கள் ஆராய துவங்கியுள்ளனர்.

வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி கூறியதாவது:

தமிழகத்தை பொறுத்தவரை பிப்., மாதத்தில், கரூர், பரமத்தி, நீலகிரி, சென்னை, வேலுார் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் வெப்பம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கோவையை பொறுத்தவரை ஜன., யில் சராசரியை ஒட்டி பதிவாகியுள்ளது.

பிப்., மாதத்தின் சராசரி வெப்பநிலை, 32 டிகிரி செல்சியஸ். கோவையில், அதிகபட்சம் 34.8 வரை செல்லலாம். இந்நிலையில், கடந்த, 5ம் தேதி, 35.8 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

எப்போதும் இயல்பை விட ஒரு டிகிரி அதிகரிக்கவே, குறையவோ வாய்ப்புகள் உண்டு. இது, 2 – 3 டிகிரி அதிகரித்தால் மட்டுமே அதை அதிக வெப்பம் என குறிக்கப்படும். தற்போது கோடை காலம் குறித்து கூற முடியாது. ஆறு அல்லது ஏழு நாட்களுக்கு மட்டுமே முன்னறிவிப்பை தெரிவிக்க முடியும். காலநிலை என்பது எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடியது. இந்த வெப்பம் அதிகரிப்புக்கு காலநிலை மாற்றம் தான் அடிப்படை காரணம்.

மழை குறைவாக இருப்பது, வெயில் அதிகரிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது. ஒரு

நாளில் வெப்பம் அதிகரித்துள்ளது. இது மாறலாம். வரும் நாட்கள் மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது நடந்தால் வெப்பநிலை குறையும். தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்தால் மட்டுமே பாதிப்பு அதிகரிக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.