பாரதியார் பல்கலை வளாகத்தில் சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு

0
7

கோவை:பாரதியார் பல்கலை வளாகத்துக்குள் சிறுத்தை புகுந்ததால், மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

கோவை, மருதமலை அருகே, 1,000 ஏக்கர் பரப்பில் பாரதியார் பல்கலை அமைந்துள்ளது. நேற்று காலை 8:00 மணிக்கு, பல்கலை வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.

காலை விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த பல்கலை ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர், சிறுத்தையை பார்த்தனர். வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த வனத்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்களை விடுதிகளில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். பல்கலையின் பல்வேறு பகுதிகளில் தேடியும் சிறுத்தை கிடைக்கவில்லை.

சிறுத்தை நடமாட்டம் குறித்து அறியாமல், வழக்கம் போல் நேற்று பல்கலைக்கு வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரையும், வகுப்பறைகளிலேயே இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தினர். பல்கலையின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

வனத்துறையினர் தேடுதலில், வனப்பகுதிக்குள் சிறுத்தை சென்றது தெரிந்தது. இதையடுத்து வகுப்பறைகளில் இருந்து நுழை வாயில் வரை பஸ்களில் அழைத்து வரப்பட்ட, மாணவ – மாணவியர் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர், பல்கலையை ஒட்டிய பகுதிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ”பல்கலை அருகில் புதர் மண்டி உள்ளது. இதை சுத்தம் செய்ய, ஏற்கனவே நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சுத்தம் செய்யவில்லை. ”சிறுத்தை வந்ததால், அப்பகுதியை சுத்தம் செய்ய பல்கலை நிர்வாகத்துக்கு, மீண்டும் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. சிறுத்தை தற்போது வனத்துக்குள் சென்று விட்டது. அதன் நடமாட்டத்தை கண்காணிக்க, மூன்று கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.