கோவை,: கோவை நகைக்கடையில், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை வாங்கி மோசடி செய்த இரு பெண்கள் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, கிராஸ்கட் ரோட்டில், தனியார் நகை கடைக்கு ஜன., 10ல், காரில் வந்த இரு பெண்கள் உட்பட நான்கு பேர், தங்களை தொழிலதிபர்கள் என அறிமுகம் செய்து கொண்டனர். வைர நெக்லஸ் வாங்க வந்துள்ளதாக தெரிவித்தனர்.
பல்வேறு வைர நெக்லஸ்களை அவர்களுக்கு ஊழியர்கள் காண்பித்தனர்.
அவசரத்தில் பணம் மற்றும் ஏ.டி.எம்., கார்டு எடுத்து வர மறந்ததாக கூறி, அன்றைய தினம், 12.50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்தனர்.
பொங்கல் பண்டிகைக்கு நகை எடுத்துக் கொள்வதாக கூறி சென்றனர். தொடர்ந்து, ஜன., 14ம் தேதி கடைக்கு வந்த நான்கு பேரும், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நெக்லசை தேர்வு செய்தனர்.
காசோலையை பெற்றுக்கொண்ட ஊழியர்கள், அவர்கள் முகவரி மற்றும் மொபைல் போன் எண்ணையும் பெற்றனர். நான்கு பேரும், வைர நெக்லசை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.
கடை ஊழியர்கள் அவர்கள் கொடுத்த காசோலையை வங்கியில் மாற்ற முயன்றனர்.
அப்போது அந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அவர்கள் கொடுத்த மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்ட போது, ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து அவர்கள் அளித்த முகவரிக்கு சென்று பார்த்தனர். அது போலி என, தெரிந்தது.
நகைக்கடை சூப்பர்வைசர், சுண்டக்காமுத்துாரைச் சேர்ந்த மனோஜ், 42, புகாரில், காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.