தொட்டியில் கஞ்சா செடி வளர்ப்பு; கல்லுாரி மாணவர்கள் ஐவர் கைது

0
5

போத்தனூர்; கோவையில் தொட்டியில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் போலீசார் சோதனையில் கைது செய்யப்பட்டனர்.]

கோவை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில், கல்லூரி மாணவர்கள் போதை பொருட்கள் விற்பனை, பயன்பாட்டை தவிர்க்க போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் மாணவர்களின் அறையில் தங்கியுள்ள முன்னாள் மாணவர்கள் வாயிலாகவே, போதை பொருட்கள் விற்கப்படுவது தெரிந்தது.

இதையடுத்து தற்போது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இச்சோதனை நடத்தப்படுகிறது. அவ்வகையில் நேற்று குனியமுத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பி.கே.புதூர், கோவைபுதூர் சுற்றுப் பகுதிகளில் அதிகாலை, 5:30 முதல், 9:00 மணி வரை மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 20 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோவைபுதூர் வசந்தம் நகரில் ஐந்து மாணவர்கள் தங்கியிருந்த அறையில், தொட்டியில் வைத்து ஆறு கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவது தெரிந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் அரியலூரை சேர்ந்த கவியரசன், கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த விஷ்ணு, தனுஷ், அபினவ்கிருஷ்ணன், அனிருத் ஆகியோரை கைது செய்தனர்.

கஞ்சா வளர்ப்பில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்ட சம்பவம் போலீசாரையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.