கணக்கு கேட்ட தாய்க்கு அடி; கல்நெஞ்சுக்கார மகனுக்கு சிறை

0
7

கோவை; வெள்ளானைப்பட்டி, கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபாகரன், 61; ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி ரேணுகாதேவி, 58. இவர்களுக்கு இரண்டு மகன்கள். திருமணமாகி மனைவியுடன் தனியாக வசித்து வருகின்றனர். ரேணுகாதேவி, நீலிகோணம்பாளையம் பகுதியில் இருந்த பிரபாகரனின் வீட்டை ரூ. 40 லட்சத்திற்கு விற்று, மகன்கள் இருவருக்கும் தலா ரூ. 10 லட்சம் கொடுத்தார்.

மீதம் இருந்த பணத்தில், பிரபாகரனின் வங்கி கணக்கில் வைத்து அவரின் மருத்துவ செலவை கவனித்து வந்தார். இந்நிலையில், கணக்கில் இருந்த பணத்தை, இளைய மகன் பிரதீப் செலவு செய்து விட்டதாக தெரிகிறது. ரேணுகாதேவி பிரதீப்பிடம் கேட்ட போது, பணம் அனைத்தையும் செலவு செய்து விட்டதாக தெரிவித்தார்.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த பிரதீப், தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். பலத்த காயம் அடைந்த ரேணுகாதேவி, சிங்காநால்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரதீப்பை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.