‘ABC’ ஆகிய மூன்றையும், அதற்குரிய அளவுகளில் பராமரிப்பது முக்கியம் என்கிறார், இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்.
அவர் கூறியதாவது:
சர்க்கரை நோய் என்பது, வாழ்நாள் முழுவதும் நம்முடன் இருக்கும் நம் பங்காளி. இந்த பங்காளியை தட்டி, கட்டுக்குள் வைத்திருந்தால் நமக்கு எந்த தொல்லையும் வராது.
இதற்கு முக்கியமான சில குறிப்புகளை பார்க்கலாம். ஒரு சில விசயங்களை கட்டுக்குள் வைத்திருந்தாலே, சர்க்கரையால் பல உறுப்புகள் பழுதாகும் வாய்ப்பை நாம் தடுக்க முடியும்.
ரத்த நாளங்கள் எனும் ரத்தக்குழாயை தெளிவாக, நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு, ‘ABC’ மற்றும் அதற்கான அளவுகள் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
‘A’ என்றால் ‘ஏ1சி’ எனப்பொருள். மூன்று மாத சர்க்கரை அளவின் சராசரியை குறிப்பதே ‘ஏ1சி’. ‘B’ என்றால் ‘பிளட் பிரஷர்,’ ‘C’ என்றால் கொலஸ்ட்ரால்.
இந்த மூன்றையும், முறையாக பராமரித்தால் மாரடைப்பு, வாதம், பார்வையிழப்பு, சிறுநீரகப்பழுது, கால் இழப்பு ஆகியவற்றை தவிர்க்கலாம்.
சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு, வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு, 80 – 130 க்குள் இருக்க வேண்டும். உணவு உட்கொண்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து சர்க்கரை அளவு, 180 க்குள் இருக்க வேண்டும்.
‘ஏ1சி’ எனும் மூன்று மாத சர்க்கரை அளவின் சராசரி, 7 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். இதை பராமரித்தால் சர்க்கரையால், ரத்தகுழாய்க்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
‘B’ எனும் பிளட் பிரஷர், குறைந்தபட்சம் 140/90 என்ற அளவில் இருக்க வேண்டும். சர்க்கரை உள்ளவர்கள், குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், ‘C’ எனும், கொலஸ்ட்ராலை பராமரிக்க வேண்டும்.
எல்.டி.எல்., எனும் கெட்ட கொலஸ்ட்ராலை, 70க்கு கீழ் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எச்.டி.எல்., எனும் நல்ல கொலஸ்ட்ரால், ஆண்களுக்கு, 40 க்கு மேல், பெண்களுக்கு, 50 க்கு மேல் இருக்குமாறும் பார்த்துக் கொள்வது நலம்.
இந்த ஐந்து அளவுகளையும் முறையாக பாராமரித்து வந்தால், சர்க்கரை இருந்தாலும் நலமான வாழ்க்கையை வாழ முடியும்.
(அடுத்த வாரம் சர்க்கரை எப்படி இதயத்தை குறிவைக்கிறது எனப்பார்க்கலாம்).