கூடலூர் : முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம், குட்டி யானைகளை பராமரித்து வளர்ப்பதில் சிறப்பான இடத்தை பெற்றுள்ளது
முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், குட்டி யானை அதன் பாகன்கள் இடையேயான பாச பிணைப்பினை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண படத்துக்கு ‘ஆஸ்கார்’ விருது கிடைத்தது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் முதுமலைக்கு நேரில் வந்து, ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண படத்தில் இடம்பெற்ற குட்டியானைகளை பார்த்ததுடன், பாகன் தம்பதியை சந்தித்து பாராட்டி சென்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலினும் அழைத்து பாராட்டினார்.
தெப்பக்காடு யானைகள் முகாம் தாயை பிரிந்த மற்றும் தாயை இழந்த குட்டி யானைகள் பராமரிப்பதில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த டிச., 24ல், கோவை வனக்கோட்டம், தடாகம் வடக்கு பகுதியில், தாயை பிரிந்த ஒரு மாதமான பெண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். அதனை யானை கூட்டத்தில் சேர்க்கும் முயற்சி தோல்வி அடைந்தது. குட்டி யானையை பராமரிப்பதற்காக, முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு, இரண்டு ஊழியர்கள் குட்டி யானையை பராமரித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், ‘ முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், பெண் குட்டி யானை உட்பட 29 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. யானைகள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது’ என்றனர்.