பூக்களால் ஆன யானை, முயல் , சரஸ்வதி; மலர் கண்காட்சியை ரசித்த 36 ஆயிரம் பேர்

0
23

கோவை; கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில் நடந்த மலர்க்கண்காட்சியை 36 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

கோவை, வேளாண் பல்கலையில் தாவரவியல் பூங்காவில், மலர்க் கண்காட்சி கடந்த 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடந்தது. மலர் அலங்காரங்கள், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.குறிப்பாக, பூக்களால் ஆன முயல், யானை, சரஸ்வதி, அன்னப்பறவைகள் உள்ளிட்ட உருவங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்தன.

தோட்டக்கலைத் துறை சார்பில் காய்கறி, பழங்களின் ரகங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பூ, பழ நாற்றுகள், இடுபொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பல்வேறு துறைகள் சார்ந்து ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.

ஐந்து நாட்களில் 12 ஆயிரம் குழந்தைகள் உட்பட மொத்தம், 36 ஆயிரத்து 300 பார்வையாளர்கள், கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

வேளாண் பல்கலை நிர்வாகத்தினர் கூறுகையில், ‘மொத்தம் 36 ஆயிரத்து 300 பார்வையாளர்கள் மலர்க் கண்காட்சியை ரசித்துள்ளனர். மலர்க்கண்காட்சி நிறைவடைந்தாலும், பெரும்பாலான அலங்காரங்களை, இந்த வார இறுதி வரை காட்சிக்கு வைத்திருக்கிறோம்.

தொடர்ந்து பராமரிக்க இயலாத உருவ அலங்காரங்கள் மட்டும் இருக்காது. தோரணங்கள் உள்ளிட்ட இதர அலங்காரங்கள், மலர் அணிவகுப்புகளை மேலும் ஓரிரு நாட்களுக்கு பார்க்கலாம்.

ஸ்டால்கள், தோட்டக்கலை கண்காட்சிகள் இருக்காது. இதற்கு வழக்கமான கட்டணமான பெரியவர்களுக்கு ரூ.50, குழந்தைகளுக்கு ரூ.30 என்ற கட்டணமே வசூலிக்கப்படும்’ என்றனர்.