பொள்ளாச்சி; சினிமாவில் பாம்பை போட்டு அரசு பஸ்சில் இடம் பிடிக்கும் காமெடி சீனை போன்று, பொள்ளாச்சி யில் அரிவாளை போட்டு பஸ்சில் சீட் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து கிராமப்புறங்கள், வெளியூர்களுக்கு செல்வதற்கு, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமப்புறங்களில் கூலித் தொழிலாளர்கள், வேலைக்கு செல்வோர் பயணித்து வருகின்றனர்.
கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் கூட்ட நெரிசல் நேரத்தில், இடம் பிடிக்க போட்டா போட்டி போடுவது வழக்கமாகியுள்ளது.
ஒரு சிலர், துணிப்பை, கர்சீப் போன்றவை போட்டு இடம் பிடிப்பதை காணமுடியும்.ஆனால், பொள்ளாச்சியில் இருந்து, தமிழக எல்லையில் உள்ள கோபாலபுரம் செல்லும் அரசு பஸ்சில் (வழித்தட எண்: 5சி) சீட் பிடிக்க இரண்டு அரிவாள்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதை பஸ்சில் பயணித்த பொதுமக்களில் சிலர் எடுத்து போட்டோ, சமூகவலைதளங்களில் பதிவிட்டதும் வைரலானது. பஸ்சில் இடம் பிடிக்க அரிவாளா என விமர்சனம் எழுந்தது.
இதையடுத்து, போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், பஸ்சில் வந்த தேங்காய் பறிக்கும் தொழிலாளர்கள், டீ குடிக்க சென்ற போது சீட்டில் யாரும் உட்காராமல் இருக்க, கையில் வைத்திருந்த அரிவாளை வைத்து சென்றதாகவும், அதன்பின் எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.