பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; இன்று யாகசாலை பூஜை துவக்கம்

0
56

தொண்டாமுத்துார்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக யாகசாலை பூஜை இன்று துவங்குகிறது.

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், வரும், 10ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கிறது. இக்கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதற்காக கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம், பாலாலயம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, கோவில் திருப்பணிகள் மற்றும் 49 வேதிகை மற்றும் 60 குண்டங்களுடன் யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி நடந்தது. தொடர்ந்து, கடந்த, 4ம் தேதி, விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.

நேற்று, காலை, அஷ்ட மூர்த்தி ஹோமமும், ஸம்ஹிதா ஹோமமும் நடந்தது. மாலையில், புனித மண் எடுத்தலும் நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு, அக்னி ஸங்க்ரஹணம், புனித தீர்த்தம் அழைத்தல், பரிவார மூர்த்திகள் கலசங்கள் யாகசாலைக்கு எழுந்தருளுதல் நடக்கிறது. அதன்பின், மாலை, 4:30 மணிக்கு, மங்கல இசை, விநாயகர் பூஜை, முளைப்பாலிகை இடுதல், பிரதான தெய்வங்களான பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், பால தண்டபாணி கலாகரிஷனம் நடக்கிறது. தொடர்ந்து, பிரதான கலசங்கள் மற்றும் யாகசாலையில், 96 வகையான மூலிகை திரவியங்கள் தெளிக்கப்படும்.

பல தலங்களில் இருந்து வரும் ஓதுவாமூர்த்திகள், பன்னிரு திருமுறை விண்ணப்பம் செய்கின்றனர். இரவு, 9:00 மணிக்கு, பூர்ணாகுதி, தீபாராதனையுடன் முதல் கால வேள்வி பூஜை முடிவடையும்.

தொடர்ந்து நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜை நடக்கிறது. வரும், 10ம் தேதி, காலை, 9:50 மணி முதல் 10:05 மணி வரை, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.