கோவையில் அமையுமா தனி சித்த மருத்துவமனை; மாவட்ட அலுவலருக்கு வாகனம் இல்லா அவலம்

0
6

கோவை; கோவை மற்றும் திருப்பூர் பகுதிக்கு பொதுவாக, மாவட்ட சித்த மருத்துவமனை மற்றும் அலுவலகம் திருப்பூர் பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கோவை நகர் பகுதியில் உரிய கட்டமைப்பு ஏற்படுத்த பல்வேறு கருத்துருகள் சமர்ப்பித்தும், அரசு தரப்பில் புறக்கணிக்கப்படுவதாக அதிருப்தி எழுந்துள்ளது

திருப்பூர் மாவட்டத்தில், 25 படுக்கை வசதியுடன் அரசு தலைமை சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, பணிபுரியும் மாவட்ட சித்த அலுவலரே கோவை மாவட்ட அலுவலராகவும் பணியாற்றி வருகிறார். கோவை உட்பட தமிழகத்தின் மேலும் சில மாவட்டங்களில், மாவட்ட சித்த மருத்துவர் பணியிடம் உருவாக்கப்படவில்லை.இதனால், பணிச்சுமை அதிகரிப்பதாலும், நிர்வாக பணிகளை கவனிக்க இயலாமலும் மருத்துவர்கள் திணறி வருகின்றனர். தவிர, அலோபதி பிரிவில் அனைத்து துறைகளிலும் மாவட்ட அலுவலர்களுக்கு தனி அரசு வாகனம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட சித்த அலுவலர்களுக்கு என தனி வாகனம் இதுவரை வழங்கப்படவில்லை. அரசு சித்த மையங்களுக்கு தொடர்ந்து விசிட் செய்யும் சூழலில், ஒவ்வொரு முறையும் வாடகை வாகனங்களை எதிர்பார்க்கும் சூழல் நிலவுகிறது.

கொரோனா காலகட்டத்தில் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம் அனைத்து தரப்பினருக்கும் புரிந்தது. பல நோயாளிகள் அலோபதி சிகிச்சை தவிர்த்து, சித்த மருத்துவமுறையில் சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் பெயரளவில் செயல்படும் ஓர் துறையாகவே மாறியுள்ளது

இதற்கென தனி மருத்துவமனை நகர் பகுதியில் இல்லை. அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு பிரிவாக பெயரளவில் எவ்வித வசதியும் இன்றி உள்ளது.

கோவையில் ஒருங்கிணைந்த தனி சித்த மருத்துவமனை அமைக்க பல ஆண்டுகளாக கருத்துருக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. திருப்பூரில், 35 சித்த மையங்களும், கோவையில் 45 மையங்களும் உள்ளன. இவ்விரண்டு மாவட்டங்களுக்கும் ஒரு மாவட்ட சித்த அலுவலரே உள்ளார்.

மருத்துவதுறையில் பிற மாவட்ட அதிகாரிகளுக்கு தனி அரசு வாகனம் இருக்கும் போது, மாவட்ட சித்த அலுவலர்களுக்கு அது கூட வழங்கப்படவில்லை.

மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை, வாகன செலவினத்திற்கு வழங்குகின்றனர். மொத்தமாகவே நிதியில்லை என்று கூறி, இத்துறையை அரசு தரப்பில் புறக்கணிக்கின்றனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.