ஆர் .கோபாலபுரம் அரசு உயர் நிலைப் பள்ளிக்கு இடம் கிடைத்தது; நிதி கிடைக்கல!

0
9

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆர்.கோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு இடம் கிடைத்த நிலையில், புதிய கட்டடம் கட்ட நிதி கிடைக்கவில்லை. இந்நிலையில், கட்டடம் கட்ட தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும், என, கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.

பொள்ளாச்சி அருகே, ஆர்.கோபாலபரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த, 2021ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி தரம் உயர்த்தப்பட்டாலும், தேவையான கட்டட வசதியில்லை.

இப்பள்ளியின் மொத்த பரப்பளவு, 25 சென்ட் இடத்தில், 20 குழந்தைகளுடன் அங்கன்வாடி மையம், இரண்டு கட்டடங்களில் ஐந்து வகுப்பறையுடன் செயல்படும் தொடக்கப்பள்ளியில், 119 மாணவர்கள் படிக்கின்றனர்.

இதே பள்ளி வளாகத்தில், தனி கட்டட வசதியில்லாததால் உயர்நிலைப்பள்ளி, இரண்டு கட்டடங்களில் உள்ள, மூன்று வகுப்பறைகளில் செயல்படுகிறது. இதில், ஆறு முதல், பத்தாம் வகுப்பு வரை, 175 மாணவர்கள் படிக்கின்றனர்.

மூன்று வகுப்பறைகளில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகுப்பறையும், ஒன்பதாம் வகுப்பு, தலைமையாசிரியர், அலுவலக அறையும், 8ம் வகுப்பு ஆசிரியர் அறையுடன் ஒரு வகுப்பறை, ஆறு மற்றும், ஏழாம் வகுப்புக்கு வெளியில் உள்ள வராண்டாவிலும் வகுப்புகள் செயல்பட்டன

வராண்டாவில், வெயில் நேரத்தில் மரத்தடி நிழலிலும், மாலை நேரத்தில் தண்ணீர் தொட்டி அருகே மாணவர்களை அமர வைத்து வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. மழைக்காலங்களில் கல்வி கற்பிப்பதில் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக, வகுப்பறை முன் உள்ள வராண்டாவில் தார்பாலின் கட்டப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன.

அரசு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பின், வகுப்பறை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்ய ஆய்வு செய்த போது, அரசுக்கு சொந்தமான நிலமே ராமபட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலபுரத்தில் இல்லை என கூறப்பட்டது.

தற்போதுள்ள வகுப்பறை கட்டடத்தின் மீது, மற்றொரு கட்டடம் கட்டலாம் என்றால், தற்போதுள்ள கட்டடம் அந்த அளவுக்கு வலுவானதாக இல்லை என கூறப்பட்டது.

இது குறித்து, கடந்தாண்டு ‘தினமலர்’ நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து முதற்கட்டமாக இட

நெருக்கடியை சரி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர். அதில், உயர்நிலைப்பள்ளியில், 6, 7ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சமுதாய கூடத்திலும், மற்ற வகுப்புகள், தொடக்கப்பள்ளி வளாகத்திலேயும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தொடர்ந்து, ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிலம் உள்ளதா என கல்வித்துறை அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்தினர் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அதில், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருந்த, 15 சென்ட் நிலம் கண்டறியப்பட்டு பள்ளி கட்டுவதற்காக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இடம் ஒதுக்கீடு செய்தும் இன்னும் கட்டடம் கட்ட நிதி உதவி கிடைக்காத நிலை உள்ளது.