கோவை; தமிழக கவர்னரின் சமூக சேவைக்கான விருது, கோவை இதயங்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.
சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு, தமிழக கவர்னரின் சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன. நிறுவனத்துக்கான, 2024ம் ஆண்டின் சிறந்த சமூக சேவை விருதுக்கு, கோவை இதயங்கள் அறக்கட்டளை தேர்வு செய்யப்பட்டது. குடியரசு தினத்தன்று, சென்னையில் நடந்த விழாவில், இவ்விருதை கவர்னர் ரவி வழங்கினார். இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் பெற்றுக் கொண்டார்.
டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறுகையில், ”இதயங்கள் அறக்கட்டளை நாடு முழுவதும், டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட, 2,300 குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அரசின் பார்வைக்கு எங்கள் பணி சென்றுள்ளதால், இத்தகைய குழந்தைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்,” என்றார்.