மாநகராட்சி நிர்வாகம் தகுதியில்லாதோருக்கு பொறுப்பு வழங்குவதால் சர்ச்சை காலி பணியிடங்களால் தடுமாறுகிறது!

0
15

கோவை: கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு, தகுதியில்லாத கீழ்நிலை அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது

மக்கள் தொகை அடிப்படையில் கோவை மாநகராட்சிக்கு, 301 பணியிடங்கள் (அரசாணை எண்: 152) அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, மண்டலத்துக்கு ஒருவர் வீதம் ஐந்து உதவி நிர்வாக பொறியாளர்கள் இருக்க வேண்டும்; நால்வரே இருக்கின்றனர். வார்டு பணிகளை கவனிக்கும் இளம் பொறியாளர் கனகராஜ், தெற்கு மண்டலத்தில் உதவி நிர்வாக பொறியாளராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார்.

வடக்கு மண்டல உதவி நிர்வாக பொறியாளர் எழில், பணி மாற்று அடிப்படையில் பிரதான அலுவலகத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார். இவருக்கு பதிலாக, வார்டு பணிகளை கவனிக்கும் உதவி பொறியாளர் முத்துக்குமாருக்கு, உதவி நிர்வாக பொறியாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. இப்பதவி, 20 வார்டுகளை கவனிக்கும் அதிகாரம் படைத்தது. கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வார்டு பணி செய்யும் இவர், இனி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 20 வார்டுகளை சேர்த்து பார்க்க வேண்டும். வார்டு பணிகளை மட்டுமே செய்ய வேண்டிய தகுதியுள்ள ஒரு அதிகாரிக்கு, உயரிய பதவி கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது. அவரால், ஒரே நேரத்தில் மூன்று மண்டலங்களை சேர்த்து, 23 வார்டுகளில் நடக்கும் பணிகளை எவ்வாறு கவனிக்க முடியும் என்பதை சிந்திக்காமல் நியமித்திருக்கின்றனர்.

இதேபோல், நகர பொறியாளர், இரண்டு துணை மாநகர பொறியாளர், இரண்டு நிர்வாக பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிர்வாக பொறியாளர் கருப்பசாமி இரு மண்டலத்துக்கும், நிர்வாக பொறியாளர் முருகேசன் இரு மண்டலங்களையும் கவனிக்கின்றனர். நகர பொறியாளர் பொறுப்பு, 100 வார்டுகளை கவனிக்கும் உயரிய பதவி. இப்பொறுப்பு நிர்வாக பொறியாளர் முருகேசனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. இவர், மண்டல பொறுப்புகளையும் கவனிக்க வேண்டும்; பிரதான அலுவலகத்தில் இருந்து நகர பொறியாளர் பணியையும் செய்ய வேண்டும்.

அரசாணைப்படி, இரண்டு துணை கமிஷனர்கள் நியமிக்க வேண்டும். துணை கமிஷனர் சிவக்குமார் மட்டும் இருக்கிறார்; இன்னொரு பணியிடம் காலியாக இருப்பதால், அப்பொறுப்பையும் கூடுதலாக பார்க்கிறார். இவரை, மதுரை மாநகராட்சிக்கு தமிழக அரசு இட மாறுதல் செய்திருக்கிறது. இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் இருப்பதாக கூறி, அவரை விடுவிக்காமல், மாநகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.

மாநகராட்சியில் மாமன்ற செயலர் பொறுப்பு முக்கியமானது. கவுன்சிலர்களுக்கு தீர்மானங்கள் அனுப்புவது; மாமன்றத்தை வழிநடத்துவது; மேயர் மற்றும் கமிஷனருக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் பணி இவர்களை சேர்ந்தது.

இப்பதவியும் காலியாக இருப்பதால், உதவி கமிஷனர் (கணக்கு) உஷாராணிக்கு வழங்கப்பட்டு உள்ளது. உதவி கமிஷனர் (வருவாய்) மகேஷ் கனகராஜ் மருத்துவ விடுப்பில் இருப்பதால், அப்பொறுப்பையும் இவரே கூடுதலாக கவனிக்கிறார்.

நகரமைப்பு பிரிவில் மண்டலத்துக்கு இருவர் வீதம், 10 உதவி நகரமைப்பு அலுவலர்கள் நியமிக்க வேண்டும். ஆனால், ஐந்து பேரே பணிபுரிவதால், ஒவ்வொருவரும், 20 வார்டுகளை கவனிக்கின்றனர்.

இவ்வாறு, கோவை மாநகராட்சியில் உயரிய பணியிடங்கள் பல காலியாக உள்ளன. ஒரு அதிகாரியே மற்றொரு பதவியை கூடுதலாக கவனிப்பது முறைகேட்டுக்கு வழிவகுக்கிறது; கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது; பணிகள் முடங்குகின்றன. தகுதியில்லாதோருக்கு உயரிய பதவி வழங்கப்பட்டு இருப்பதால், வளர்ச்சி பணிகளில் தரம் இருப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.