கோவை; மார்கழி மாத உற்சவங்களுக்கிடையே, புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளும், கோவில்களில் நேற்று சிறப்பாக நடந்தது
புத்தாண்டை வரவேற்கும் விதமாக, மங்கள பொருட்களை சமர்ப்பித்து, கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர் கோவை மக்கள்.
* புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில், அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. சிவாச்சாரியார்களின் வேதபாராயணம் நடந்தது. விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பின், அருகம்புல் மாலை, 1,008 தேங்காய்களால் ஆன பிரம்மாண்ட மாலை மற்றும் வண்ண மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
* ஈச்சனாரி மஹாலட்சுமி மந்திர் கோவிலில் மஹாலட்சுமி, துர்கா, சரஸ்வதி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஈச்சனாரி விநாயகர், தங்ககவசத்தில் ஜொலித்தார். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
* மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவிலில், நாகசாயி சந்தனகாப்பு அலங்காரத்திலும், சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலில், அய்யப்ப சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்திலும், பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ஸ வரத ஆஞ்சநேயர் கோவிலில், வஜ்ரங்கி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.
* மேட்டுப்பாளையம் சாலை, ஹவுசிங் யூனிட்டிலுள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில், அம்மனுக்கு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
* ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள், தங்க கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.
* தண்டுமாரியம்மன், கோனியம்மன் கோவில்களில், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்தனர்.
* ஈச்சனாரி விநாயகர் மற்றும் முந்திவிநாயகர் கோவில்களில், புத்தாண்டுக்கு வழிபாட்டுக்கு வந்த பக்தர்களுக்கு, லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் அதிகாலை முதலே தரிசனம்செய்தனர்