பெ.நா.பாளையம்; கோவை அருகே, பெண் யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
கோவை வனச்சரகம், பன்னிமடை தடாகம் வனப்பகுதியில் யானை குட்டி ஒன்று தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர், யானை குட்டியை பத்திரமாக மீட்டு, கண்காணித்து வருகின்றனர்.
அப்போது ஒரு கி.மீ., தொலைவில் தனியார் தோட்டத்தில் பெண் யானை இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். இந்த யானை, தனிமைப்படுத்தப்பட்ட குட்டி யானையின் தாயா அல்லது பிற யானை கூட்டங்களில் இருந்து வழி தவறி வந்ததா என, வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
யானையின் உடல், பரிசோதனைக்குப்பின் வரப்பாளையம் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
வனத்துறையினர் கூறுகையில், ‘யானை இறப்புக்கான காரணம், பரிசோதனை முடிவு முழுமையாக வந்த பிறகே தெரியவரும். பிற யானையின் தாக்குதல், மாரடைப்பு அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கலாம். யானை கூட்டத்துடன் குட்டி யானையை சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்றனர்.