சும்மா கிறுக்கித் தள்ளட்டும் உங்கள் மழலை

0
98

வரும் கல்வியாண்டில் பள்ளிக்கு முதன்முறையாக செல்லும், பிள்ளைகளுக்கு வீடுகளில் பாடம் இப்போதே துவங்கிவிட்டது

விரும்பிய பள்ளிகளில் இடம் பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், கேள்விகளை தயாரித்து, பதில்களையும் சொல்லிக்கொடுக்க, பல பெற்றோர் துவங்கிவிட்டனர்.

ஆனால், குழந்தைகள் முதன் முதலில் படிக்கும் போது, ‘அ, ஆ’ அல்லது ‘ஏ, பி, சி, டி’ என தமிழ், ஆங்கில எழுத்துக்களை சொல்லிக்கொடுக்க கூடாது என்கிறார், ஆசிரியர் மற்றும் மொழித்திறன் வளர்ப்பு பயிற்சியாளர் உஷா.

அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

தாய்மார்கள் ஆர்வத்தில் எடுத்தவுடன், ‘ஏ – ஆப்பிள்’ ‘பி- பால்’ என எழுத்துக்களையும், வார்த்தைகளையும் துவக்கி விடுகின்றனர் இது முற்றிலும் தவறான அணுகுமுறை.

எல்.கே.ஜி., யு.கே.ஜி., சேர்க்கையில் எழுத்துக்கள் எழுத தெரியுமா, வார்த்தைகள் படிக்க தெரியுமா என யாரும் சோதிப்பதில்லை.

முதலில் சொல்லிக்கொடுக்க துவங்கும் போது, ஏதோ புது விளையாட்டு என ஆர்வமாக கவனிக்கும். நாளடைவில் கற்றல் என்பது கசந்துவிடும்

கிறுக்க விடுங்கள்!

முதலில் பிள்ளைகள் சுவற்றில் அல்லது நோட்டில், அவர்கள் இஷ்டத்திற்கு கிறுக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். அதற்கு, வண்ண பென்சில்களை, கிரையான்களை வாங்கி கொடுக்க வேண்டும்.

அதன் பின் ஒரு பெரிய கட்டத்தை சதுரமோ, செவ்வகமோ வரைந்து அதற்குள் வெளிவராமல் கிறுக்க ஊக்குவிக்க வேண்டும். அதன் பின் கட்டத்தை சிறிதாக்கி அதற்குள் கிறுக்க கூற வேண்டும்.

தொடர்ந்து, இரண்டு புள்ளிகள் வைத்து, நேர்கோடு, சாய் கோடு, ‘சி’ போன்ற வளைவுகளை இணைக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இரண்டு புள்ளிகளை தொடர்ந்து, முழுவதும் புள்ளிகளை வைத்து நேர்கோடு, சாய் கோடு, ‘சி’ போன்ற வளைவுகளை இணைக்கவேண்டும்.

அதன் பின், நீண்ட நேர்கோடு, வளைகோடுகள், வளைவுகளை புள்ளிகள் மூலம் இணைக்க பழக்க வேண்டும்.

இறுதியாக புள்ளிகள் இன்றி, நேர்கோடு, வளைக்கோடு, கேர்வ் என்ற ‘சி’ போன்ற வளைவுகளை போட பழக்கிய பின், எழுத்துக்களை எழுத கற்றுக் கொடுக்கலாம்.

அதுவும் முதலில் புள்ளிகள் வைத்தே, அதை இணைத்து பழக்க வேண்டும். குறிப்பாக, தாய்மொழி சார்ந்த எழுத்துக்களை முதலில் கற்பிப்பது, குழந்தைகளுக்கு எளிதாக இருக்கும்.

பலர் ஆங்கில மொழியை, முதலில் கற்றுக்கொடுக்க ஆர்வம் காண்பிக்கின்றனர். பிறந்து, புரண்டு, தவழ்ந்து, எழுந்து, நடந்து… என்று படிப்படியாக வளரும் பிள்ளைகளுக்கு, கற்றலிலும் படிப்படியான அணுகு முறையை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு, அவர்கூறினார்.