காரமடையில் திருமங்கையாழ்வார் நட்சத்திர வைபவம்

0
101

மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம் வைபவம் நடந்தது.

பன்னிரு ஆழ்வார்களில் முக்கியமானவர், திருமங்கையாழ்வார். இவரது திரு நட்சத்திரமான கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு, வைணவ கோவில்களில் விசேஷம் நடைபெறும்.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, வைணவ ஸ்தலமான காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கையாழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.

அதிகாலை கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், கால சந்தி பூஜையும் செய்யப்பட்டது. இதை அடுத்து திருமங்கையாழ்வார், ராமானுஜர் சன்னதியில் எழுந்தருளினார். அங்கு விஷ்வக் சேனர், ஆவாஹனம், லட்சுமி நாராயண ஆவாஹனம், புண்யா வசனம், கலச ஆவாஹனம் ஆகியவை மூலவர் ராமானுஜருக்கும், திருமங்கையாழ்வாருக்கும் ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. பால், தயிர், தேன், நெய், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது.

பின்பு அலங்காரம் செய்த சப்பரத்தில், வெண்பட்டு குடை சூழ, ரங்க மண்டபத்தில் அரங்கநாதர் பெருமாள் சுவாமி முன்பு, திருமங்கையாழ்வார் எழுந்தருளினார். அரங்கநாதர் சுவாமியிடம் இருந்து சந்தன மாலை, பரிவட்டம் மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் ஸ்தலத்தார்கள் வேதவியாச பட்டர், திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஆகியோர் தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தத்தில் இருந்து, திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி பாசுரங்களை சேவித்தனர். பின்பு அரங்கநாத சுவாமியிடம் இருந்து, சடாரி மரியாதை அளிக்கப்பட்டது. கோவில் உள்ளே வலம் வந்து, மீண்டும் ராமானுஜர் சன்னதியில் அடைந்தார்

உச்ச கால பூஜை, சற்று முறை சேவித்த பின், பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டினை அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் மற்றும் கோயில் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர் செய்திருந்தனர்.