தருமபுரம் ஆதினம் பாராட்டு : ஈஷாவில் திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் கடைபிடிக்கப்படுகின்றன

0
15

தொண்டாமுத்தூர்: தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கோவை ஈஷா யோகா மையத்திற்கு வருகை புரிந்தார்.

அவரை, ஈஷா பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வலர்கள், பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் தேவாரப்பாடல்களை பாடினர். தொடர்ந்து, தருமபுரம் ஆதினம், தியானலிங்கத்தில் நடந்த நாத ஆராதனையில் பங்கேற்றார்.

முன்னதாக, சூர்ய குண்டம், நாகா சன்னிதி, லிங்கபைரவி சன்னதி ஆகிய இடங்களில் தரிசனம் செய்தார். ஆதியோகி திவ்ய தரிசனத்தையும் நேரில் கண்டு ரசித்தார்.

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழ்நாடு முழுதும் பயணிக்கும் ஆதியோகி ரத யாத்திரையை, ஆரத்தி காட்டி வழிபட்டு துவங்கி வைத்தார்.

இதுகுறித்து, தருமபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது:

ஈஷா யோகா மையத்தில் நடக்கும் பல விஷயங்களை, இரு நாட்களாக நேரில் கண்டோம். திருமூலர் கூறிய நான்கு நெறிகளும் ஈஷாவில் கடைபிடிக்கப்படுகின்றன.

நம்முடைய மரபில் சிவபெருமானும், மரமும் ஒன்று. சிவபெருமான் விஷத்தை தான் சாப்பிட்டுவிட்டு, அன்பர்களுக்கும், தேவர்களுக்கும் அமிர்தத்தை வழங்கினார்.

அதேபோல் மரங்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு தரும் கார்பன் டை ஆக்ஸைடை உண்டுவிட்டு, மற்ற உயிர்கள் உயிர் வாழ, ஆக்ஸிஜனை வழங்குகின்றன.

யோகம், கல்வி, மரம் வளர்ப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு என பல சேவைகளை ஈஷா செய்து வருகிறது. வாழ்க சத்குருவின் தொண்டு, வளர்க அவரின் பணிகள். இவ்வாறு அவர் கூறினார்.