100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு-செ.தாமோதரன் எம்.எல்.ஏ. சீர்வரிசை வழங்கினார்

0
89

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் கிணத்துக்கடவு சமுதாய கூடத்தில் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ. செ. தாமோதரன் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், பழம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மேலும் கர்ப்பிணிகளுக்கு தாய் சேய் நலத்திற்கு ஆதாரமான முதல் ஆயிரம் நாட்கள் என்ற கையேடு வழங்கப்பட்டது. இந்த விழாவில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சகுந்தலா வரவேற்று பேசினார். இதில் கர்ப்பிணிகள் முறையாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கர்ப்பம் ஆனதும் குழந்தைகள் மையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறாமல் மாதம்தோறும் உடல் எடை அளவு பார்த்து கொள்ள வேண்டும். சத்தான உணவு வகைகளை சாப்பிட வேண்டும். இரும்பு சத்து மாத்திரை, முறையான மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம். மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பார்க்க வேண்டும். வெளியில் பார்க்க கூடாது என பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

விழாவில் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா, தி.மு.க மாவட்ட கவுன்சிலர் ராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் ராமசாமி, அ.தி.மு.க. கிணத்துக்கடவு பேரூராட்சி செயலாளர் கே.என்.மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சூலக்கல் கிரி, சொக்கனூர் பிரபு, கிணத்துக்கடவு பேரூராட்சி கவுன்சிலர் சக்திசரண்யா லட்சுமணன் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா, வட்டார விரிவாக்க கல்வியாளர் ஜோதிமணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.