150 அடி ஆழ கிணறு
ஆனைமலை அடுத்த பூவளபருத்தியூர் அருகே தனியார் தோட்டம் உள்ளது. இங்கு சரளப்பதி பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 29) என்பவர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இநத நிலையில் நேற்று ஆனந்த் தோட்ட வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் தோட்டத்தில் உள்ள 150 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தார். பின்னர் கிணற்றுக்குள் இருந்த கம்பியை பிடித்துக்கொண்டு காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என்று அபய குரல் எழுப்பினார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். பின்னர் கிணற்றில் தவித்துக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உயிருடன் மீட்டனர்
உடனடியாக இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் கணபதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தொழிலாளியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து கயிறு மூலம் தொழிலாளியை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். 150 அடி ஆழ கிணற்றில் விழுந்த தொழிலாளியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பாராட்டினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.