குறைந்த விலையில் தங்க நகை தருவதாக லட்சக்கணக்கில் மோசடி

0
131

குறைந்த விலைக்கு நகைகள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மசூதிவீதியை சேர்ந்தவர் சல்மான்கான் (வயது 23). இவர் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவை பீளமேட்டில் தனியார் டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் குறைந்த விலைக்கு நகைகள் தருவதாக கூறினார்கள். அவர்களின் உறுதிமொழியை நம்பி நான், எனது நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தோம்.

செல்போனில் மிரட்டல்

ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் உறுதி அளித்த படி குறைந்த விலைக்கு நகைகள் தரவில்லை. அதோடு முதலீட்டு தொகையையும் திருப்பிக் கொடுக்க மறுத்து விட்டனர். பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போதும் உரிய பதில் அளிக்கவில்லை.

இதன் மூலம் அந்த நிறுவனத்தினர் லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்து விட்டனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அந்த மோசடி நிறுவனத்தின் நிர்வாகி ஒருவரை செல் போனில் அழைத்து பேசினோம். உடனே அவர், நான் தற்போது என்.ஐ.ஏ. விசாரணையில் உள்ளேன். நீங்கள் அடிக்கடி எனக்கு போன் செய்தால் உங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரிப்பார்கள் என மிரட்டல் விடுக்கிறார்.

லட்சக்கணக்கில் மோசடி

எனவே எங்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களிடம் மோசடி செய்த பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

இது போல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வந்த பலரும் தங்களிடம் மோசடி நடைபெற்று இருப்பதாகவும், மோசடி ஆசாமிகள் முக்கிய பிரமுகர்களுடன் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு தங்களை நம்புமாறு செய்து பணத்தை மோசடி செய்து விட்டதாகவும் கூறினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.