பழங்கால நாணயங்களை கொண்டு 75-வது சுதந்திர தின வாழ்த்து மடல்- முதியவர் அசத்தல்

0
92

பொள்ளாச்சியில் பழங்கால நாணயங்களை கொண்டு 75-வது சுதந்திர தின வாழ்த்து மடல்- முதியவர் அசத்தல்

பொள்ளாச்சி- பல்லடம் ரோடு ரத்தின சபாபதிபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். 85 வயதான இவர் காகிதக்கவர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். கடந்த 60 ஆண்டுக்கு மேலாக பழங்கால நாணயங்கள், அரிய வகை ரூபாய் நோட்டுகளை சேகரித்து வருகிறார். இதுவரை ஒரு பைசா, பத்து பைசா, 25 பைசா, மன்னர்கள் காலத்து நாணயங்கள் என மொத்தம் 10 ஆயிரம் நாணயங்கள் வரை சேகரித்து வீட்டில் வைத்துள்ளார். நாட்டின் 75-வது சுதந்திர தினம் குறித்து பொதுமக்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பழைய நாணயங்களை கொண்டு வாழ்த்து மடலை தயாரித்துள்ளார். நாட்டு பற்றை அனைவரிடம் கொண்டு செல்ல தனது தள்ளாத வயதிலும் இவர் மேற்கொள்ளும் முயற்சிகள் வெகுவாக பாராட்டத்தக்கது. இதுகுறித்து வெங்கடாசலம் கூறுகையில், என்னுடைய சிறு வயது முதலே பழங்காலத்து நாணயங்கள், நோட்டுக்களை சேகரித்து வருகிறேன். இந்த நிலையில் நமது நாட்டின் 75 -வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த மடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன் இந்திய வரைபடத்துடன் வெளிவந்த 300 நாணயங்களை கொண்டு வாழ்த்து மடல் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

முதியவர் தயாரித்த வாழ்த்து மடலை அக்கம் பக்கம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பார்வையிட்டதோடு அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.