கோவை : கோவை மாநகரப் பகுதியில் சேதமாகியுள்ள, 466.53 கி.மீ., நீளமுள்ள, 3,301 சாலைகளை சீரமைக்க, ரூ.195.63 கோடி கேட்டு, நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு கோரி, தமிழக அரசுக்கு மாநகராட்சி கருத்துரு அனுப்பியுள்ளது.
கோவை நகரப் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க, பாதாள சாக்கடை குழாய் மற்றும் இணைப்பு வழங்க தோண்டப்பட்ட சாலைகள், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
24 மணி நேர குடிநீர் திட்டத்தில், ‘சூயஸ்’ நிறுவனத்தினர் குறுக்கும், நெடுக்குமாக குழிகள் தோண்டி குழாய் பதித்திருப்பதால், வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
மண் சாலையாக இருப்பதால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகி, நடக்கக் கூட முடியாத நிலை ஏற்படுகிறது.
இம்மாத துவக்கத்தில், முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார். அவருடன் வந்த தலைமை செயலர் முருகானந்தம், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளின் நிலைமையை நேரில் பார்வையிட்டார். அதன்பின், 200 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, மண்டலம் மற்றும் வார்டு வாரியாக வீதிகள் மற்றும் நீளம் அளவீடு செய்து கேட்பு பட்டியல் அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
மொத்தம், 3,301 எண்ணிக்கையில், 466.53 கி.மீ., நீளத்துக்கு தார் ரோடு போட முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.195.63 கோடி செலவாகுமென மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிர்வாக அனுமதி வழங்குவதோடு, நிதி ஒதுக்குமாறு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் அலுவலகத்துக்கு, மாநகராட்சியில் இருந்து கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
இதில், மேற்கு மண்டலத்துக்கு ரூ.52.82 கோடி, வடக்கு – ரூ.47.23 கோடி, கிழக்கு – ரூ.44.28 கோடி, தெற்கு – ரூ.32.54 கோடி, மத்திய மண்டலத்துக்கு ரூ.18.76 கோடி ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவித்த சிறப்பு நிதி என்பதால், விரைவில் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ரோடுகளை, 120 பணிகளாக பிரித்து, ‘டெண்டர்’ கோரி, விரைந்து போடுவதற்கு, மாநகராட்சி பொறியியல் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.