கோவை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 20க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடிய வாலிபரை, பீளமேடு போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர பகுதிகளில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்துள்ளதால், திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளில், தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை கோவை சின்னியம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஸ்கூட்டர் ஒன்றை நிறுத்தி, ஓட்டி வந்த நபரிடம் விசாரித்தனர்
அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவர் பயணித்த வாகனம், பீளமேடு பகுதியில் திருடப்பட்ட வாகனம் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர் விருதுநகரை சேர்ந்த அஜித் குமார், 26 என்பதும் பீளமேடு, சிங்காநல்லுார், ராமநாதபுரம் மட்டுமின்றி, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், 20க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை திருடியிருப்பது தெரியவந்தது.
திருடிய வாகனங்களை, விமான நிலையம் அருகில் உள்ள மைதானத்தில், மறைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் பதுக்கி வைத்திருந்த 14 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மீட்க போலீசார் நடவடிக்கை
பீளமேடு போலீசார் தெரிவித்ததாவது: கைது செய்யப்பட்டுள்ள அஜித்குமார் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து இரு சக்கர வாகனங்களை திருடி, ரேஷன் அரிசி கடத்தும் நபர்களுக்கு, விற்பனை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது வரை 19 வாகனங்களை திருடியுள்ளதாக தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்டுள்ள 14 வாகனங்கள் தவிர்த்து, மீதமுள்ள வாகனங்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.