வாகன சோதனை
பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தனுக்கு வால்பாறை சாலையில் இருந்து ரேஷன் அரிசி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் மற்றும் போலீசார் வால்பாறை சாலையில் வஞ்சியாபுரம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் டிரைவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
கைது
விசாரணையில் ஆனைமலையை சேர்ந்த வீரக்குமார் (வயது 24) என்பதும், வாகனத்தில் 50 கிலோ வீதம் 30 மூட்டைகளில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மேலும் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை விலைக்கு கேரளாவில் விற்பனைக்கு செய்ய கடத்தி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வீரக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1500 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.