கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளம் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு நேற்று மாலை 5:00 மணி வரை, 4,160 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வேளாண் பல்கலை மற்றும் அரசு உதவி பெறும் அண்ணாமலை பல்கலை ஆகியவற்றில் வழங்கப்படும் இளநிலை வேளாண்மை மற்றும் அதுசார்ந்த பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகளில் சேர, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, கடந்த 9ம் தேதி துவங்கியது.
வேளாண் பல்கலையில், 14 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 3 பட்டயப்படிப்புகளுக்கும், அண்ணாமலை பல்கலையில் 3 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
வரும் ஜூன் 8ம் தேதி வரை, www.tnau.ucanapply.com என்ற தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அரசு கல்லூரிகளில் 2,516 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 4,405 இடங்களும் என, மொத்தம் 6,921 இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான இடங்கள் நடப்பாண்டு நிரப்பப்பட உள்ளன. தரவரிசைப் பட்டியல் ஜூன் கடைசி வாரத்தில் வெளியிடப்பட உள்ளது.
நேற்று மாலை 5:00 மணி வரை 4,160 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது மூன்றே நாட்களில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண் பல்கலை கல்வி பாடப்பிரிவுகளுக்கான விவரங்களை, 94886 35077, 94864 25076 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.