விசைத்தறி கூட்டமைப்பு அறிவிப்பு இன்று முதல் கருப்பு கொடி போராட்டம்:

0
23

சோமனூர்; கூலி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண கோரி, விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த உள்ளோம், என, விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பிரதானமாக விசைத்தறி ஜவுளி தொழில் நடக்கிறது. சுமார், 2.5 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன.

லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள இத்தொழில், கடந்த சில ஆண்டுகளாக பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதனால், விசைத்தறி ஜவுளி தொழில் படிப்படியாக முடங்கி வருவது விசைத்தறி உரிமையாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

கூலி உயர்வு

இரு மாவட்டங்களில் இயங்கும் விசைத்தறிகளில், 95 சதவீதம் விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. விலைவாசிக்கு ஏற்ப மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு இருந்தால் மட்டுமே தொழில் ஓரளவுக்கு சீராக நடக்கும் நிலை உள்ளது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக கூலி உயர்வு கிடைக்காமல் விசைத்தறியாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.

ஷாக் அடிக்கும் மின் கட்டண உயர்வு

கூலி உயர்வு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் நிலையில், மின் கட்டண உயர்வு விசைத்தறியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல போராட்டங்களுக்கு இடையில், சலுகைகளை அரசு அறிவித்தது. ஆனால், ஆண்டுக்கு, ஆறு சதவீதம் மின் கட்டண உயர்வை இதுவரை ரத்து செய்யாததால், விசைத்தறியாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம், சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. சோமனூர், தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர், அவிநாசி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

சோமனூர் சங்க தலைவர் குமாரசாமி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கூலி உயர்வு பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது.

சங்க நிர்வாகிகள் கோபால கிருஷ்ணன், பூபதி ஆகியோர் கூறியதாவது: கடந்த ஒரு வருடமாக எட்டு முறை பேச்சுவார்த்தை நடந்தும், ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தால் தீர்வு கிடைக்கவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை.

அதனால், பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காத ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், இப்பிரச்னையில் அரசு தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாளை (இன்று) முதல்,இரு மாவட்டங்களிலும் உள்ள வீடுகள் மற்றும் விசைத்தறி கூடங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த உள்ளோம். உரிய தீர்வு கிடைக்காவிட்டால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.