வால்பாறை நகரில் சிறுத்தை உலா; சுற்றுலா பயணியருக்கு எச்சரிக்கை

0
78

வால்பாறை; வால்பாறை நகரில் சிறுத்தை நடமாடுவதால், சுற்றுலா பயணியர் இரவு நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வால்பாறையில் உள்ள, தங்கும்விடுதிகளில் சுற்றுலாபயணியர் அதிக அளவில் தங்குகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரில் இரவு நேரத்தில் சிறுத்தை உலா வந்து குடியிருப்பு பகுதியில் உள்ள நாய், கோழி போன்ற வளர்ப்பு பிராணிகளை உணவுக்காக கவ்வி செல்கிறது.

இந்நிலையில், ஸ்டான்மோர் சந்திப்பு ரோட்டில் நள்ளிரவில் சிறுத்தை நடத்து செல்வது, அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த நகரிலும் சிறுத்தை நடமாடுவதால், சுற்றுலாபயணியர் பீதியடைந்துள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வால்பாறையில் சமீப காலமாக வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. வால்பாறை நகரை ஒட்டியுள்ள ஸ்டான்மோர் சந்திப்பில் திறந்தவெளியில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால், இரவு நேரத்தில் இந்த ரோட்டில் சிறுத்தை நடமாடுகிறது.

எனவே, இரவு நேரத்தில் சுற்றுலா பயணியர் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் ரோட்டில் உலா வரும் வன விலங்குகளை துன்புறுத்தவோ, ‘செல்பி’ எடுக்கவோ கூடாது. மீறினால் சுற்றுலா பயணியர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, கூறினர்.