வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் உள்ளிருப்பு போராட்டம்

0
66

ஒப்பந்த தொகை வழங்கப்படாததை கண்டித்து வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி நிர்வாகத்தில் 50-க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இவர்கள் முறையாக டெண்டர் எடுத்து பணிகள் செய்து முடித்து 2 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இந்த நிலையில் பணி செய்து முடித்ததற்கான தொகை வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

இதனை கண்டித்து நகராட்சி ஒப்பந்ததாரர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:- நகராட்சியில் விடப்பட்ட டெண்டர் அடிப்படையில் ஒவ்வொரு ஒப்பந்ததாரர்களும் முறையாக டெண்டர் எடுத்து பல்வேறு பணிகளை செய்து முடித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த நிலையில் நகராட்சியில் முன்னாள் நகராட்சி ஆணையாளர்கள், பணி மேற்பார்வையாளர், மேலாளர் என்று பலரது தவறான செயல்பாடுகள் காரணமாக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது.

ரூ.10 கோடி

இதன் காரணமாக நாங்கள் செய்த பணிகளை நகராட்சி உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஆய்வு செய்த பிறகு தொகை தருவதாக கூறினார்கள். நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து முடித்து பல நாட்களாக ஆகிவிட்டது. ஆனால் இதுநாள் வரை தொகை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஒவ்வொருவரும் பல்வேறு இடங்களில் கடன் பெற்று பணிகளை செய்து முடித்துள்ளோம். எங்களுக்கு சுமார் ரூ.10 கோடிக்கு மேல் தொகை வழங்கப்பட வேண்டி உள்ளது.

இதனால் நகராட்சி நிர்வாகம் எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். என்றனர்.

பேச்சுவார்த்தை

இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறுகையில், இதுதொடர்பாக சென்னையில் நகராட்சி உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்கப்பட்டு வருகிற 23 -ந்தேதிக்குள் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு ஒப்பந்ததாரர்கள் கலைந்து சென்றனர்.