கோவை; வழக்கறிஞர்கள் சட்ட திருத்த மசோதாவால், வக்கீல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று, வக்கீல் சங்க கூட்டுக்குழு தலைவர் கூறினார்.
தற்போது நடைமுறையில் இருக்கும், 1961ம் ஆண்டின் வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய மசோதா தாக்கல் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு சட்ட மசோதாவை, மத்திய சட்டத்துறை மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வரைவு சட்ட மசோதா குறித்து வக்கீல் சங்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்க, வரும் 28ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
வக்கீல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு, இந்திய பார் கவுன்சில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், வக்கீல் சங்க கூட்டமைப்பு, வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டுக்குழு(ஜேக்) தலைவர் நந்தகுமார் கூறியதாவது:
வழக்கறிஞர்கள் தங்கள் உரிமைக்காக கோர்ட் புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டம் நடத்துவதன் வாயிலாக, கோரிக்கை நிறைவேற்றப்பட்டு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கிறது.
இனிமேல், வக்கீல்கள் தங்கள் உரிமை குறித்து எவ்விதமான போராட்டமும் நடத்த முடியாத அளவுக்கு, திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மீறி போராட்டத்தில் ஈடுபடும் வக்கீல்கள், வக்கீல் சங்கம் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்ட திருத்தம் கொண்டு வருவதை ஏற்க முடியாது.
வக்கீல்கள் தவறு செய்தால், அந்தந்த மாநில பார் கவுன்சிலால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாநில பார் கவுன்சில் நடவடிக்கைக்கு எதிராக, இந்திய பார் கவுன்சிலில் அப்பீல் செய்யலாம்.
ஆனால், பார் கவுன்சிலில், மத்திய அரசால் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள் சேர்ந்து நடவடிக்கை எடுக்கும் வகையில், திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது, பார் கவுன்சில் அதிகாரத்தை பறிக்கும் செயலாகும்.
வக்கீல் மீது, தனிப்பட்ட வழக்கு தொடுக்கப்பட்டு, அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டால் மட்டுமே, சம்பந்தப்பட்ட வக்கீல் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால், புதிய சட்டத்தில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்ட உடனே சஸ்பெண்ட் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தால், வக்கீல் தொழில் செய்ய முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்படும்.
தனது ‘கிளைன்டிற்காக’ வழக்கு நடத்தும் போது, அந்த வழக்கில் வக்கீல் தோல்வி அடைந்தால், அவர் மீது கட்சிக்காரர் புகார் அளிக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற செயல், வக்கீல்கள் சுதந்திரமாக தொழில் செய்யும் உரிமையை பறிப்பதாகும்.
வெளிநாட்டு வழக்கறிஞர் குழுமங்களை, இந்தியாவில் சட்ட தொழில் செய்ய அனுமதிப்பதால், இந்திய வழக்கறிஞர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இதை கண்டித்து, இந்தியா முழுவதும், பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.
தனது ‘கிளைன்டிற்காக’ வழக்கு நடத்தும் போது, அந்த வழக்கில் வக்கீல் தோல்வி அடைந்தால், அவர் மீது கட்சிக்காரர் புகார் அளிக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற செயல், வக்கீல்கள் சுதந்திரமாக தொழில் செய்யும் உரிமையை பறிப்பதாகும்.