‘வனப்பகுதியைப் பெருக்குவோம் உயிரினங்களைப் பாதுகாப்போம் ‘; ஒவ்வொருவரும் உறுதியேற்க வலியுறுத்தல்

0
4

கோவை; சர்வதேச வன தினத்தை முன்னிட்டு, கோவை ஆர்.எஸ்., புரம் வனக்கல்லூரி வளாகத்தில் உள்ள, இந்திய மரப்பெருக்கு மற்றும் வன மரபியல் மையத்தில் (ஐ.எப்.ஜி.டி.பி.,), விழிப்புணர்வு பேரணி நடந்தது.

ஐ.எப்.ஜி.டி.பி., இயக்குநர் குஞ்ஞி கண்ணன், பேரணியைத் துவக்கி வைத்துப் பேசுகையில், “எனது கல்லூரிக் காலத்தில், கல்லூரி வளாகத்தில் இருந்த மர விதைகளைச் சேகரித்து, அருகிலுள்ள இடத்தில் நாற்றுகள் நட்டேன். துவக்கத்தில் யாரும் வரவில்லை.

அதன் பிறகு, குழந்தைகள் வந்தனர். தொடர்ந்து பலரும் முன்வந்தனர். தற்போது ஊராட்சி நிர்வாகம் அதைப் பெரிய அளவில் முன்னெடுத்து, குறுங்காடே வளர்ந்துள்ளது.

மாணவர்கள் ஒரு விஷயத்தை முன்னெடுத்தால், அதன் நோக்கம் சிறப்புற நிறைவேறும். வனப்பகுதியைப் பெருக்குவோம், வன உயிரினங்களைப் பாதுகாப்போம் என அனைவரும் உறுதியேற்று, செயல்பட வேண்டும்,” என்றார்.

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லூரிகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், வனம் சார்ந்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பியபடி, பேரணியாகச் சென்றனர்.

முதுநிலை விஞ்ஞானி நாகராஜ், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ரேகா வாரியர், முதுநிலை திட்ட அலுவலர் விக்னேஷ்வரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

நிகழ்வின் ஒரு பகுதியாக, கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.