லிடார் தொழில் நுட்பம் வந்தாச்சு! விவசாய, மனைகளை அளக்க

0
24

கோவை; விவசாய விளைநிலங்களையும், மனையிடங்களையும் துல்லியமாக அளவீடு செய்ய ‘லிடார்’ தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது.

வேளாண் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பணிகளை ஒருங்கிணைக்கவும், நிலத்தின் தன்மை, அளவு, பயிர் வகைகள், விவசாயிகள் வருவாய், கடன், காப்பீடு உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் எளிதாகவும் துல்லியமாகவும் தெரிந்துகொள்ள விளை நிலங்கள் டிஜிட்டல் முறையில் சர்வே செய்யப்படுகிறது.

இதற்காக ‘அக்ரி ஸ்டாக்’ என்ற திட்டம் உருவாக்கி நிலஅளவீட்டுப் பணிமேற்கொள்ளப்படுகிறது. நிலத்தின் தன்மை, வளம், உரிமையாளர், கடன், காப்பீடு உள்ளிட்ட விபரங்கள் ‘டிஜிட்டல்’ மயமாக்கப்படும்.

விவசாய விளை நிலங்கள் கணக்கெடுப்பு ஒரு புறம் நடைபெற உள்ள சூழலில் விரிவடையப்போகும் கோவை நகரின் பரப்பு துல்லியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் நகரை முழுமையாக துல்லியமாக அளவீடு செய்ய உள்ளனர்.

நுாறு வார்டுகளை கொண்ட கோவை மாநகராட்சி, 257.04 சதுர கி.மீ., பரப்பை கொண்டுள்ளது. இது மேலும் விரிவாக்கப்பட்டு, 438.54 சதுர கி.மீ., விரிவடையப்போகிறது. அப்போது, 150 வார்டுகளாக தரம் உயரும்.

இச்சூழலில் கோவை மாவட்ட நில அளவைத்துறை வரும், 18 அன்று கோவை நகரை சுற்றியுள்ள பகுதிகளை ‘டிரோன்’ வாயிலாக ‘லிடார்’ முறையில் நிலஅளவைப்பணிகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த அளவீடு அடுத்த ஆண்டு வரை தொடரும். கோவை நகரிலுள்ள அனைத்து வார்டுகளின் பரப்பளவுகளையும் கணக்கீடு செய்யும். அங்குள்ள கட்டடங்கள், காலி மனையிடம் விவசாயப்பரப்பு ஆகியவற்றை முழுமையாக கணக்கீடு செய்யும்.அந்த கணக்கீடுகளை கொண்டு டிஜிட்டல் முறையில் நகரிலுள்ள மொத்த கட்டடம், மனையிடம், விவசாயப்பரப்பு, தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்தும் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்படும்.

இது குறித்து கோவை மாவட்ட நிலஅளவைத்துறை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது: நில அளவைத்துறையில் அளவீடு செய்யும் பணிகள் துல்லியமாகிவிட்டன. அதற்காக நவீன தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டுள்ளன. அதன்படி ‘டிரோன்களை’ கொண்டு ‘லிடார்’ முறைப்படி அளவீடு செய்யப்படும் ஓராண்டு காலத்தில் அளவீடுகள் நிறைவடையும். இதற்கான பணிகள் வரும் பிப்.,18 ல் துவங்கும்

மனையிடபரப்பு, கட்டடங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லுாரிகள், வர்த்தக ஸ்தாபனங்கள் என்று அனைத்தும் தனித்தனியாக வகைப்படுத்தப்படும். இவையனைத்தும் இணையத்தில் பதிவு செய்யப்படும். இந்த தரவுகள் அனைத்தும் பதிவேற்றப்படும். இத்திட்டம் நகரவளர்ச்சித்துறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்திய வேளாண் ஆராய்சிக்கழகம் (ஐகார்) புதிய திட்டத்தின் படி வேளாண் பரப்புகளை துல்லியமாக அளவீடு செய்து வருகிறது. தமிழகத்திலுள்ள ஏழு மாவட்டங்களில் இப்பணிகள் துவங்கியுள்ளது. கோவையில் விரைவில் துவங்கும் என்றனர்.

லிடார் என்றால் என்ன?

ஒரு தனித்துவமான தொலை உணர்வு தொழில்நுட்பம், லேசர் வடிவிலான ஒளியை கொண்டு பரப்பளவையும், எல்லைகளையும், சுற்றுப்பரப்பையும் துல்லியமாகவும் எளிதாகவும் கண்டறியும். துல்லியமான முப்பரிமாண தகவல்களை உருவாக்கும், வேளாண், கட்டுமானம், சாலைப்பணி மற்றும் சுரங்கத் தொழில்கள் உள்ளிட்ட தொழில்துறையில் பயன்படுத்தப்படும் சிறந்த அமைப்பாகும்.லிடாரில்ஒரு லேசர், ஒரு ஸ்கேனர், ஜி.பி.எஸ்., சர்வே ரிசீவர் ஆகியவற்றை டிரோனில் பொருத்தி அளவீடு மேற்கொள்ளலாம். இதன் வாயிலாக சமதளமான நிலத்தையும், வயல்வெளி பரப்பையும், ஆழமான பகுதிகளையும் துல்லியமாக அளவிடமுடியும். சில நேரங்களில் ‘எட்ஜ் லிடார்’ என்ற கருவியையும் மிகத்துல்லியமாக அளவீடு செய்ய பயன்படுத்தலாம்.