கோவை: கோவை கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில், விபத்து காப்பீடு பாலிசி பெற, மார்ச் 6ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தபால் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, பொது காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டுக்கு வெறும் 560 முதல் 799 ரூபாய் வரை பிரீமியத்தில் ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள், திட்டத்தில் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள சான்றின் நகல் ஆகியவை இல்லாமல், தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் பயன்படுத்தி, வெறும் 5 நிமிடத்தில், முற்றிலும் டிஜிட்டல் முறையில் பாலிசி வழங்கப்படுகிறது.
திட்டம் வாயிலாக, விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஆகியவற்றுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும். விபத்தால் ஏற்படும் மருத்துவ செலவுகளை ஈடு செய்யும் வகையில், (உள்நோயாளி/வெளிநோயாளி) திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆறு பொது காப்பீட்டு நிறுவனங்கள், பல்வேறு சலுகைகளை வழங்குவதால், பொதுமக்கள் தபால் நிலையம் வந்து அல்லது தபால்காரரை அணுகி, ஒவ்வொரு திட்டத்திலும் உள்ள வசதிகள் குறித்து அறிந்து, தேவையான பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.
கடந்த வாரம் கோவையை சேர்ந்த ஒருவரின் குடும்பத்துக்கு, ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. வெறும் ரூ.500 மட்டுமே செலுத்தி, விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி, வரும் மார்ச் 6ம் தேதி வரை, கோவை கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில், இந்த விபத்து காப்பீடு பாலிசிகள் எடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, கோவை தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சிவசங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.