ரயில் நிலையத்தில் கஞ்சா மூட்டை; விட்டுச்சென்றவர் பற்றி விசாரணை

0
36

கோவை; கோவை ரயில்நிலையத்தில், எட்டு கிலோ கஞ்சாவை கைப்பற்றி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, கோவையில் உள்ள கல்லுாரி மாணவர்கள், ஐ.டி., ஊழியர்கள் மற்றும் பலருக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதற்கு, ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து, ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, முதலாம் பிளாட்பாரத்தில் ஒரு மூட்டை கிடந்தது. அந்த மூட்டையை கைப்பற்றி போலீசார் சோதனை செய்தனர். அதில், 8.100 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து. கஞ்சாவை கடத்திய நபர் யார் என்பது குறித்து. சி.சி.டி.வி.,கேமரா காட்சிகளின் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர்.