மேட்டுப்பாளையம், டிச.3: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற வனபத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு சொந்தமான கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து விட்டதாக நேற்று மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலினுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி பாழடைந்த கிணற்றிலிருந்து தவறி விழுந்த புள்ளிமானை பத்திரமாக மீட்டனர். பின்னர், அதனை நெல்லி மலை வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனர். விடுவித்தவுடன் துள்ளி குதித்து புள்ளிமான் வனப்பகுதிக்குள் ஓடிச்சென்றது.