‘மெட்ரோ ரயில்’ வழித் தடங்களில் சிக்கல்; அரசு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

0
18

கோவை: ‘மெட்ரோ ரயில்’ வழித்தடங்களில் என்னென்ன சிக்கல் இருக்கிறது; இவ்வழித்தடங்களில், மற்ற அரசு துறைகளின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக, கோவையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது

கோவை – அவிநாசி ரோட்டில் கட்டப்படும் மேம்பாலம் நீலாம்பூர் வரை நீட்டிப்பு; நான்கு வழிச்சாலையாக சத்தி ரோடு விரிவாக்கம்; சரவணம்பட்டி சந்திப்பில் மேம்பாலம்; உக்கடம் மற்றும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இதில், அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோடு என, இவ்விரு வழித்தடங்களில் ‘மெட்ரோ ரயில்’ திட்டம் செயல்படுத்த, ‘சென்னை மெட்ரோ ரயில்’ நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.

மிக முக்கியமாக, உக்கடத்தில் மெட்ரோ ஜங்சன் வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், ரூ.20 கோடியில் உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது. தமிழக அரசு செய்ய திட்டமிட்டுள்ள பணிகளால், ‘மெட்ரோ ரயில்’ வழித்தடங்களுக்கு பாதிப்பு வருமோ என்கிற எண்ணம் உருவாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட வழித்தடங்களில் போதுமான இடம் இல்லாமல் இருந்தால், திட்டத்தை நிராகரிக்க வாய்ப்பிருக்கிறது. அத்தகைய சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறை அதிகாரிகளுடனான, ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை, கலெக்டர் கிராந்திகுமார் ஏற்பாடு செய்திருக்கிறார். கோவை விமான நிலையம் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில், இக்கூட்டம் இன்று (டிச., 24) காலை, 9:30 மணிக்கு துவங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

சிக்கல் வரக்கூடாது

அவிநாசி ரோட்டில் கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை மேலும், 5 கி.மீ., துாரத்துக்கு நீட்டிக்க, திட்ட மதிப்பீடு தயாரித்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்கான அளவீடுகள் மேற்கொள்ள வேண்டும்.ஏற்கனவே நீலாம்பூர் வரை, மெட்ரோ ரயில் தடம் இருக்கிறது. தற்போது நீட்டிக்கப்படும் மேம்பாலத்தால், மெட்ரோ திட்டத்துக்கு இடையூறு ஏற்படக்கூடாது. பாதாள சாக்கடை, குடிநீர் குழாய், மின் புதை வடம் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ‘மெட்ரோ ரயில்’ திட்டத்தில், விமான நிலையத்துக்கும் இணைப்புவழித்தடம் கொடுப்பது; விமான நிலைய ஆணையத்திடம் என்.ஓ.சி., பெறுவது தொடர்பாக விவாதிக்க ஆவணங்கள் எடுத்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.