காரமடை, டிச.9: காரமடை அருகே வழி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 4 சவரன் தங்கச்சங்கிலியை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். காரமடையை அடுத்துள்ள டி.ஜி.புதூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கண்ணம்மா (75). இவர் நேற்று அதேபகுதியில் வசித்து வரும் தனது மகன் மனோகரன் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, தாகம் ஏற்படவே அப்பகுதியில் இருந்த தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரிடம் மேட்டுப்பாளையத்திற்கு செல்ல வழி கேட்பது போல் நடித்துள்ளனர்.
மூதாட்டியும் வழி சொல்லி உள்ளார்.மேலும், அவர்கள் குடிக்க தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் பிடித்துள்ளனர். அப்போது, ஒருவர் மோட்டார் சைக்கிளின் இன்ஜினை ஆப் செய்யாமல் இருந்துள்ளார். மற்றொருவர் மூதாட்டி அசந்த நேரத்தில் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி கண்ணம்மா இதுகுறித்து காரமடை போலீசுக்கு தகவல் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 4 சவரன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.