கோவை; புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் மீது ஏறி, இளைஞர் ஒருவர் அட்டகாசம் செய்தார்.
புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், நேற்று முன்தினம் இரவு ரேஸ்கோர்ஸ் பகுதியில் திரண்டனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள மீடியா டவர் அருகில், பாட்டு போட்டு நடனம் ஆடி புத்தாண்டை வரவேற்றனர்.
சரியாக, 12:00 மணியளவில் மீடியா டவரில் புத்தாண்டு வாழ்த்து போடப்பட்டது. அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் மதுபோதையில், மீடியா டவர் மீது ஏறினார். டவரின் பாதி வரை ஏறிய அந்த நபர் ஒற்றை கையை விட்டு, புத்தாண்டு வாழ்த்து கூறி அட்டகாசம் செய்தார். தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு வந்து இளைஞரை கீழே இறக்கினர். பின்னர், அவரை அழைத்து சென்று, போலீசார் பாணியில் விசாரித்து, இளைஞரின் போதையை தெளிய வைத்து அனுப்பினர்.