கோவை; ஒரே வீட்டிற்கு பல்வேறு இணைப்புகள் பெற்று இருப்பின், விதிமுறைகளின் படி அவை ஒருங்கிணைக்கும் வகையில் மின்வாரிய பணியாளர்கள் கள ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாநிலத்தில் வீடுகள், தொழிற்சாலை, அலுவலகம் உட்பட, 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் சுமார், 60 முதல் 80 லட்சம் மின் இணைப்புகளுக்கு அரசு, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. 100 யூனிட் மின்சாரம் பெறும் வகையிலும், மின் கட்டணத்தை குறைக்கும் நோக்கில் பலர் ஒரே வீடுகளுக்கு பல்வேறு இணைப்புகள் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால், ஏற்படும் மின் இழப்பை தடுக்கும் வகையில், புதிய கட்டணம் கணக்கீட்டு முறை கடந்த 2024 ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. ஒரே வளாகத்தில் பல்வேறு இணைப்புகள் இருப்பின் ஒருங்கிணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில், போதிய தெளிவு இன்மையால் பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
இதில், வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளுக்கு என்ன செய்வார்கள் என்ற பல்வேறு குழப்பங்கள் எழுந்தன. இந்நிலையில், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்பு என யாருக்கும் இதனால் எவ்வித பாதிப்பும் இல்லை. விதிமுறை மீறி மின் இணைப்பு பெற்று இருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மண்டலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் பெற்றுள்ளவர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டு மின் அலுவலர்கள் கள ஆய்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, கோவை மண்டல தலைமை பொறியாளர் குப்புராணி கூறியதாவது:
புதிய மின்கணக்கீடு நடைமுறை உரிய களஆய்வுகள் மேற்கொண்டே உறுதிசெய்யப்படும். வாடகை வீடுகளில் இருப்பவர்கள் அச்சப்பட தேவையில்லை.
ஒரு சிலர் ஒரே வீட்டிற்கு வெளிபுறமாகவும், உட்புறமாகவும் மாடி அமைத்துக்கொண்டு ஏழு இணைப்புகள் வரை பெற்றுள்ளனர். அவர்களின் இணைப்புகள் மட்டுமே ஒருங்கிணைக்கப்படுகிறது. வாடகைக்கு குடியிருப்போர் அதற்கான வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, போன்ற அரசு அங்கீகரித்த சான்றுகளை காண்பித்து தனி இணைப்பாகவே தொடரலாம். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கும் எவ்வித சிக்கல்களும் இல்லை.
மின்சார கட்டணத்தை குறைக்கவும், 100 யூனிட் இலவச மின்சாரம் கூடுதலாக பெறும் நோக்கிலும் ஒரு குடும்பத்திற்கே , ஒரு அலுவலகத்திற்கே இரண்டு, மூன்று இணைப்பு பெற்றவை மட்டுமே இணைக்கப்படும்.
இதில், வேறு குழப்பங்கள் இருப்பின் சம்மந்தப்பட்ட பகுதி மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வை எளிதாக பெறலாம். இதில், சிக்கல்கள், குழப்பங்கள் ஏதும் இல்லை.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.