கோவை; கோவை மா.கம்யூ., அலுவலகத்துக்கு 95 ஆயிரத்து, 33 ரூபாய் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில், ஏப்., – செப்., மற்றும் அக்., – மார்ச் வரை ஆறு மாதத்துக்கு ஒருமுறை என ஆண்டுக்கு இரு முறை சொத்து வரி வசூலிக்கப்படுகிறது. 2024 அக்., முதல் 6 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. முதல் தவணை சொத்து வரியை, செப்., 30க்குள் செலுத்தாதவர்களுக்கு ஒரு சதவீத அபராத வரியும் வசூலிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவிடம் கேள்வி எழுப்பியபோது, ‘சொத்து வரிக்கு அபராதம் விதிப்பது ரத்து செய்யப்படும். ‘ட்ரோன்’ சர்வே நிறுத்தி வைக்கப்படும். இதற்கு முன் எடுத்த அளவீடும் நிறுத்தி வைக்கப்படும்’ என அறிவித்தார். அமைச்சரின் அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
வரி வசூலில் மாநகராட்சி வருவாய் பிரிவினர் தீவிரம் காட்டுவதோடு, ஆட்டோக்களில் ஒலி பெருக்கி பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதற்கு முன் ஆறு மாதத்துக்கு ஒருமுறை ரூ.2,345 சொத்து வரி செலுத்தப்பட்டது.
இப்போது, வணிக பயன்பாட்டு வகைப்பாட்டில் கட்சி அலுவலகத்தை சேர்த்து, வரி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி, ஓராண்டுக்கு, 88 ஆயிரத்து, 861 ரூபாய் சொத்து வரி, அபராத தொகை ரூ.4,000, தாமத அபராத தொகை ரூ.2,172 சேர்த்து, 95 ஆயிரத்து, 33 ரூபாய் சொத்து வரி செலுத்தச் சொல்லி, நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதற்கு விளக்கம் கேட்டாலும், மாநகராட்சி அதிகாரிகள் பதிலளிக்காமல் நழுவுகின்றனர். இதுகுறித்து, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பத்மனாபன் கூறுகையில், ”கடந்தாண்டுகளில் ஆறு மாதத்துக்கு, 2,345 ரூபாய் சொத்து வரி செலுத்தினோம். 100 சதவீதம் வரி உயர்வு என்றால், 4,690 ரூபாய் தானே வர வேண்டும். இப்போது, 6 மாதத் துக்கு 44 ஆயிரத்து, 430 ரூபாய் செலுத்தச் சொல்கின்றனர்.
அபராதம், தாமத அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. கட்டடத்தை வணிகப் பயன்பாடாக மாற்றியுள்ளனர். கட்சி அலுவலகத்தை வணிக பயன்பாடாக மாற்றியுள்ளனர். கட்சி அலுவலகத்தில் வணிக பயன்பாடு என்ன நடக்கிறது என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அநியாயமாக இருக்கிறது,” என்றார்.