கோவை: கோவை மாநகராட்சிக்கான, 2025-26ம் நிதியாண்டுக்குரிய வரவு – செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யும் மாமன்ற சிறப்பு கூட்டம், 28ம் தேதி காலை, 12:00 மணிக்கு, விக்டோரியா ஹாலில் நடக்கிறது.
கோவை மாநகராட்சி சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வரவு – செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்), மார்ச் மாதத்தில் மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
மாமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன், மேயர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, மண்டல தலைவர்கள் மற்றும் நிலைக்குழு தலைவர்களின் கருத்துக்கள் கேட்டறியப்படும். அக்குழு கூட்டம், 24ம் தேதி காலை, 10:00 மணிக்கு மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அக்கூட்டம் முடிந்ததும், காலை, 11:00 மணிக்கு வரி விதிப்பு குழு கூட்டம் நடத்தப்படுகிறது. அதில், 2025-26ம் நிதியாண்டுக்கான வரவு – செலவு திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.
வரும், 27ம் தேதி (வியாழக்கிழமை) காலை, 10:30 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான சிறப்பு கூட்டம், விக்டோரியா ஹாலில் நடத்தப்படும்; மறுநாள் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை, 10:30 மணிக்கு மாமன்ற சாதாரண கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
திடீரென இவ்விரு கூட்டங்களையும், 28ம் தேதி ஒரே நாளில் நடத்தி முடிக்க, அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. அதனால், 28ம் தேதி மாமன்ற கூட்டத்தை, 10:30 முதல், 11:30 மணிக்குள் ஒரு மணி நேரத்துக்குள் நடத்தி முடித்து விட்டு, மதியம், 12:00 மணிக்கு பட்ஜெட் கூட்டம் நடத்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
மேயர் ரங்கநாயகி முன்னிலையில், வரி விதிப்பு குழு தலைவர் முபஷீரா, வரவு – செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட் மீதான உரையை மேயர் நிகழ்த்துவார். நடப்பாண்டு, கல்வி, பொது சுகாதாரம், நகரமைப்பு, பொறியியல் பிரிவு என அனைத்து பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து, சிறப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் செய்யாதது!
மக்கும் குப்பையில், ‘பயோ காஸ்’ உற்பத்தி செய்யும் திட்டம்; குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. உலர் மற்றும் ஈரக்கழிவுகளை இயந்திரம் மூலம் எரியூட்டி, பேவர் பிளாக் கற்கள் உருவாக்குதல், பிளாஸ்டிக் அரவை இயந்திரம் வாங்கும் திட்டம் செயல்படுத்தவில்லை. உள்ளூர் திட்ட குழும நிதியில் திட்டச்சாலைகள் உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஏழு திட்டச்சாலைகள் உருவாக்க, ரூ.111 கோடி கேட்டு நகர ஊரமைப்புத்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டது; இன்னும் திட்டச்சாலைகள் உருவாக்கவில்லை. அதன்பின், வேறு இடங்களில் மூன்று திட்டச்சாலைகள் உருவாக்க ஆய்வு செய்யப்பட்டது; நிதி ஒதுக்காததால், கிடப்பில் போடப்பட்டு உள்ளது.