மலைப்பாதையில் யானைகள்; வனத்துறை எச்சரிக்கை

0
10

வால்பாறை; மலைப்பாதையில் யானைகள் நடமாடுவதால், சுற்றுலாபயணியர் கவனமாக செல்ல வேண்டும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வால்பாறையில் பருவமழைக்கு பின் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக, எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ளன

இந்நிலையில், வால்பாறை – பொள்ளாச்சி ரோட்டில் கொண்டைஊசி வளைவுகளுக்கு இடையே யானைகள் இரவு நேரத்தில் ரோட்டை கடக்கின்றன. இதே போல் ஆழியாறு கவியருவி செல்லும் ரோட்டிலும் யானைகள் நடமாடுகின்றன.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வால்பாறை – பொள்ளாச்சி ரோட்டில் யானைகள் அதிக அளவில் முகாமிட்டுள்ளன. குறிப்பாக, இரவு நேரத்தில் யானைகள் கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே ரோட்டை கடக்கின்றன.

வால்பாறைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் மலைப்பாதையில் மெதுவாக இயக்க வேண்டும். ரோட்டில் யானைகள் தென்பட்டால், உடனடியாக வாகனங்களை பின்நோக்கி நகர்த்த வேண்டும். யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பின் மீண்டும் வாகனங்களை இயக்க வேண்டும். யானைகள் அருகில் செல்லவோ, செல்பி எடுக்கவோ கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.